சமையல் வேலைக்கு அழைத்து சென்று மூதாட்டியிடம் கத்தி முனையில் நகை பறித்த தொழிலாளி கைது
திசையன்விளை:
திசையன்விளை அருகே உள்ள சீலாத்திகுளத்தை சேர்ந்தவர் பரமசிவன் (வயது56) சமையல் தொழிலாளி. இவர் சமையல் வேலைக்கு உதவியாளராக வயதான பெண்களை அழைத்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அப்படி சமையல் வேலைக்கு வரும் பெண்களை காட்டு பகுதிக்கு அழைத்து சென்று கத்தியை காட்டி மிரட்டி அவர்கள் காது, கழுத்துகளில் அணிந்துள்ள தங்க நகைகளை பறித்து சென்றுள்ளார். இது தொடர்பாக இவர் மீது 12 வழக்குகள் உள்ளது.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சுப்பிரமணியபுரத்தை சேர்ந்த திருமணி மனைவி கனகமணி (60) என்பவரை சமையல் வேலைக்கு வருமாறு அழைத்து சென்று முடவன் குளம் காட்டு பகுதியில் வைத்து கத்தியை காட்டி மிரட்டி அவர் காதில் அணிந்திருந்த கம்மலை பறித்து சென்றுள்ளார்.
இதுபற்றி கனகமணி திசையன்விளை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்திய போலீசார் பரமசிவனை இன்று கைது செய்தனர்.