செய்திகள்
கோப்பு படம்

பாலத்தில் இருந்து குதித்து உயிர் பிழைத்தவர், சிகிச்சை பெற்ற ஆஸ்பத்திரி மாடியில் இருந்து குதித்து பலி

Published On 2020-01-28 11:49 GMT   |   Update On 2020-01-28 11:49 GMT
மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற மெக்கானிக் ஆஸ்பத்திரியின் மாடி யில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
திருமங்கலம்:

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்துள்ள செல்லம்பட்டியை சேர்ந்தவர் பாரதிராஜா (வயது32). இவர் பேரையூர் பகுதியில் டிராக்டர் மெக்கானிக் ஒர்க்ஷாப் வைத்திருந்தார்.

கடந்த சில நாட்களாக இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஒரு அரசு ஆஸ்பத்திரி செவிலியருக்கும் பிரச்சினை ஏற்பட்டது. இதில் அவர், பாரதி ராஜாவை தரக்குறைவாக பேசியதாக தெரிகிறது.

மேலும் அந்த செவிலியர் போலீசிலும் புகார் செய்துள்ளார். இதன் அடிப்படையில் போலீசாரும், பாரதிராஜாவை அழைத்து விசாரித்தனர்.

இதனால் விரக்தியுடன் காணப்பட்ட அவர் நேற்று மதியம் ஆலம்பட்டி மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள பிரீத்தி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் இன்று அதிகாலை 4 மணிக்கு எழுந்த பாரதிராஜா, திடீரென்று ஆஸ்பத்திரி மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனால் ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்படடது.

இந்த சம்பவம் தொடர்பாக புதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News