செய்திகள்
கந்திலி அருகே கேஸ் கசிந்ததால் குடிசை வீடு தீ பற்றி எரிந்தது
கந்திலி அருகே குடிசை வீட்டில் திடீரென கேஸ் கசிவு ஏற்பட்டு விபத்துக்குள்ளானது. இதில் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது.
காக்கங்கரை
திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி அருகே ஏர்ரம்பட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட தோல்கானூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி பார்வதி. இந்த நிலையில் இவர்களது குடிசை வீட்டில் நேற்று மாலை திடீரென கேஸ் கசிவு ஏற்பட்டது. உடனே வீட்டில் இருந்தவர்கள் வெளியே ஓடி வந்தனர். பின்னர் சிறிது நேரத்தில் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதனால் குடிசை வீடு தீ மளமளவெள கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. இதனை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து திருப்பத்தூர் தீயணைப்புத்துறையினருக்கும், கந்திலி போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர் பற்றி எரிந்து கொண்டிருந்த குடிசை வீட்டின் தீயை வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். இதனால் வீட்டில் இருந்து அனைத்து பொருட்களும் எரிந்து நாசமானது. இதனால் நேற்று அந்த பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.