அம்பத்தூரில் ஜே.சி.பி. எந்திரம் திருடிய 3 பேர் கைது
சென்னை:
அம்பத்தூர் கள்ளிக்குப்பம் கங்கை நகரை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி.
இவர் ஜே.சி.பி. எந்திரம் வாடகைக்கு விடும் தொழில் செய்து வருகிறார். கடந்த 19-ந்தேதி தனது ஜே.சி.பி. எந்திரத்தை கள்ளிக்குப்பம் பெட்ரோல் பங்க் அருகில் நிறுத்திவிட்டு சென்றார்.
மறுநாள் வந்து பார்த்த போது அந்த ஜே.சி.பி. எந்திரம் அங்கு இல்லை. அதை யாரோ திருடிச் சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து ராஜீவ்காந்தி போலீசில் புகார் செய்தார்.
அம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜே.சி.பி. எந்திரத்தை திருடியவர்களை தேடி வந்தனர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
அதன் அடிப்படையில் 3 பேர் ஜே.சி.பி. எந்திரத்தை திருடிச்சென்றது தெரிய வந்தது.
இதையடுத்து, செங்குன்றம் பாடியநல்லூரைச் சேர்ந்த கார்த்திக் (30), பவானி நகரைச் சேர்ந்த ராமராஜ் (26), ஆந்திராவை சேர்ந்த கேசவலு (28) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஜே.சி.பி. எந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஒரு மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.