பல்லடம் அருகே தண்ணீர் வாளியில் மூழ்கி 15 மாத குழந்தை பலி
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள வடுகபாளையத்தை சேர்ந்தவர் பிரபாகரன். மின் வாரிய ஊழியர். இவரது மனைவி மோகனா. இவர்களது 15 மாத குழந்தை ஜெகத். நேற்று காலை மோகனா சமையலறையில் வேலை செய்து கொண்டிருந்தார்.
அப்போது தொட்டிலில் தூங்கி கொண்டு இருந்த குழந்தை ஜெகத் விழித்து கீழே இறங்கி சென்று குளியலறை அருகே தண்ணீருடன் வைக்கப்பட்ட வாளியில் தவறி விழுந்தான். சிறிது நேரம் கழித்து தொட்டிலில் இருந்த குழந்தையை தேடிய மோகனா வாளியில் மூச்சு திணறியவாறு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக குழந்தையை தூக்கி கொண்டு பல்லடத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார். அவர்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுமாறு கூறினார்கள். அதன்படி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். ஆனால் குழந்தை இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதேபோல் திருப்பூர் அவிநாசிக் கவுண்டம் பாளையத்தை சேர்ந்த கண்ணனின் ஒரு வயது மகள் கனிஷ்கா நேற்று முன்தினம் தண்ணீர் வாளியில் தலைக்குப்புற விழுந்து மூச்சு திணறி பலியானாள். அடுத்த நாளில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நேற்று காலை பிரபாகரனின் வீட்டிற்கு சென்ற குழந்தை ஜெகத்தின் தாத்தா சுப்பிரமணியம் குழந்தை கனிஷ்கா தண்ணீர் வாளியில் விழுந்து மூச்சு திணறி இறந்த சம்பவத்தை சுட்டி காட்டி விழிப்புணர்வுடன் இருங்கள் என பெற்றோருக்கு அறிவுரை கூறி சென்றுள்ளார். அவர் சென்ற ஒரு மணி நேரத்தில் குழந்தை ஜெகத் இறந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.