செய்யாறு அருகே கவிழ்ந்து கிடந்த லாரி மீது வேன் மோதி 7 பக்தர்கள் காயம்
செய்யாறு:
பாண்டிச்சேரியில் இருந்து கொசு வலைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று ராஜஸ்தானுக்கு சென்று கொண்டிருந்தது. செய்யாறு புரிசை ஏரிக்கரை வளைவில் வந்தபோது லாரி நிலை தடுமாறி ரோட்டில் கவிழ்ந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக் கோட்டை அடுத்த பல்சூர் கிராமத்தை சேர்ந்த 15 பேர் மாலையணிந்து மேல்மருவத்தூருக்கு வேனில் புறப்பட்டனர்.
வேனை அதே பகுதியை சேர்ந்த ராஜ் (வயது 35) என்பவர் ஓட்டினார். புரிசை ஏரிக்கரையில் வந்தபோது வளைவில் கவிழ்ந்து கிடந்த லாரி மீது வேன் மோதியது.
இதில் வேனின் முன்பகுதி நொறுங்கியது. இதில் ராஜேஷ் (வயது 14), நிதிஷ்குமார் (20), ஸ்ரீநாத் (23), ராஜேஷ் (18), நவீன் (21), சிவகுமார் (23), டிரைவர் ராஜ் உட்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
அனக்காவூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.