செய்திகள்
சீட்டுப்பணம் கட்டி ஏமாந்தவர்கள் போராட்டம் நடத்தினர்.

ராஜபாளையம் அருகே பொங்கல் சீட்டு நடத்தி ரூ.44 லட்சம் மோசடி

Published On 2020-01-20 12:14 GMT   |   Update On 2020-01-20 12:16 GMT
பொங்கல் சீட்டு நடத்தி ரூ.44 லட்சம் மோசடி செய்தவரை கைது செய்ய வலியுறுத்தி பாதிக்கப்பட்டவர்கள் போராட்டம் நடத்தினர்.

ராஜபாளையம்:

ராஜபாளையம் அருகே சேத்தூர் சாவடி தெருவைச் சேர்ந்தவர் ராமர் (வயது 45). இவர் அந்தப்பகுதியில் மக்களிடம் பொங்கல் சீட்டு நடத்தி மாதா மாதம் பணம் வசூல் செய்து வந்துள்ளார். சீட்டு கட்டாதவர்களிடம் அடாவடி செய்து பணம் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சீட்டு முடிந்து பொங்கலுக்கு பணம் தர வேண்டிய நிலையில் திடீரென்று இரவோடு, இரவாக ராமர் வீட்டைப் பூட்டி விட்டு தலைமறைவானார்.

32 பேரிடம் ரூ.44 லட்சம் வரை வசூல் செய்து மோசடி செய்ததாகத் தெரிகிறது. இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் சேத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

இந்த நிலையில் சீட்டு பணம் கட்டி ஏமாந்தவர்கள் ராமரைக் கண்டித்து எழுதப்பட்ட வாசகங்கள் அடங்கிய அட்டையை ஏந்தியவாறு வீட்டின் முன் முற்றுகைப் போராட்டம் நடத்தினார்கள்.

தகவல் அறிந்து வந்த போலீசார் போராட்டம் நடத்தியவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி விருதுநகர் குற்றப்பிரிவில் புகார் செய்யுமாறு கூறினர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News