செய்திகள்
பூபே‌‌ஷ் பாகெல்

ஹிட்லர் போன்று மோடி ஆட்சி நடத்துகிறார்: பூபே‌‌ஷ் பாகெல்

Published On 2020-01-09 01:50 GMT   |   Update On 2020-01-09 01:50 GMT
மக்களின் சிந்தனைகளை கண்டுகொள்ளாமல் தனது சிந்தனையை மட்டுமே எண்ணி செயல்படுகிற அரசு இருக்குமானால், அது மோடியின் இந்த ஹிட்லர் அரசு தான் என்று சத்தீ‌‌ஷ்கார் முதல்-மந்திரி பூபே‌‌ஷ் பாகெல் கூறியுள்ளார்.
சென்னை :

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகமான சென்னை சத்தியமூர்த்திபவனுக்கு, சத்தீ‌‌ஷ்கார் முதல்-மந்திரி பூபே‌‌ஷ் பாகெல் நேற்று வருகை தந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை மந்திரி அமித் ஷாவும் சட்டங்கள் மூலம் மக்களை க‌‌ஷ்டப்படுத்தி வருகிறார்கள். மக்களின் சிந்தனைகளை கண்டுகொள்ளாமல் தனது சிந்தனையை மட்டுமே எண்ணி செயல்படுகிற அரசு இருக்குமானால், அது மோடியின் இந்த ஹிட்லர் அரசு தான். தற்போது கா‌‌ஷ்மீரில் என்ன நடக்கிறது? என்று யாருக்கும் தெரியவில்லை.



அந்தளவு மக்கள் அங்கு இன்னல்களை அனுபவித்து வருகிறார்கள். தேசிய குடியுரிமை சட்டத்துக்கு முன்பு உலகம் சுற்றிய மோடி தற்போது எந்த நாட்டுக்கும் செல்வதில்லை. உலக தலைவர்களும் நமது நாட்டுக்கு வருவதில்லை. ஜப்பான், கனடா அதிபர்கள் தங்களது இந்தியா பயணத்தை ரத்து செய்திருக்கிறார்கள். உலக வரைபடத்தில் இந்தியாவுக்கு ஒரு கெட்ட பெயரை மோடி அரசு ஏற்படுத்திவிட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

அவர் இந்தியில் கூறியதை இளைஞர் காங்கிரஸ் தலைவர் அசன் தமிழில் மொழி பெயர்த்துக் கூறினார். முன்னதாக சத்தியமூர்த்திபவனுக்கு வருகை தந்த சத்தீ‌‌ஷ்கார் முதல்-மந்திரி பூபே‌‌ஷ் பாகெலுக்கு தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் பொதுச்செயலாளர் கே.சிரஞ்சீவி, ஊடகத்துறை தலைவர் கோபண்ணா, சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் சிவராஜசேகர் மற்றும் எஸ்.சி.பிரிவு மாவட்ட தலைவர் எம்.பி.ரஞ்சன்குமார் உள்பட நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
Tags:    

Similar News