செய்திகள்
கோப்புப்படம்

ஆபாச வீடியோ எடுத்த ஆண் ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- மாதர் சங்கத்தினர் போலீஸ் கமி‌ஷனரிடம் மனு

Published On 2020-01-08 11:33 GMT   |   Update On 2020-01-08 11:33 GMT
கோவையில் பெண்களை ஆபாச வீடியோ எடுத்த ஆண் ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாதர் சங்கத்தினர் போலீஸ் கமி‌ஷனரிடம் மனு அளித்தனர்.
கோவை:

கோவை சங்கனூர் அருகே உள்ள கண்ணப்பநகரில் தனியாருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. இங்கு பணிபுரியும் பெண் ஊழியர்கள் உடை மாற்றுவதை அங்கு வேலை பார்த்த ஆண் ஊழியர் ஒருவர் தனது செல்போனை அறைக்குள் மறைத்து வைத்து வீடியோ எடுத்துள்ளார்.

இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.

இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் தனியார் நிறுவனத்திடமும், போலீசிலும் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்தநிலையில் இந்த சம்பவத்தை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் செயலர் ராதிகா தலைமையில் மாநரக போலீஸ் கமி‌ஷனர் சுமித் சரனை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

பெண் ஊழியர்கள் உடை மாற்றும் வீடியோ காட்சிகளை அதே நிறுவனத்தில் பணிபுரிந்த ஆண் ஊழியர் ஒருவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு படம் பிடித்துள்ளார்.

இது குறித்து அப்போதே போலீசில் புகார் அளிக்கப்பட்டதாக நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஆனால் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் இது தொடர்பாக எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. பெண்கள் மீதான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் இது போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடுவர்கள் மீது போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுப்பது அவசியம். எனவே பெண்களை வீடியோ படம் எடுத்த ஆண் ஊழியர் மீது வழக்குப்பதிவு செய்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் இந்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்காத போலீஸ் உயர் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் அளித்த மனுவில் கூறியிருந்தனர்.
Tags:    

Similar News