செய்திகள்
தமிழகத்தில் என்.ஆர்.சி.யை கொண்டு வந்தால் அ.தி.முக. எதிர்க்கும் -அமைச்சர் உதயகுமார்
தமிழகத்தில் என்.ஆர்.சி.யை கொண்டுவந்தால் முதல் குரலாக அ.தி.மு.க எதிர்க்கும் என்று அமைச்சர் உதயகுமார் சட்டசபையில் தெரிவித்துள்ளார்.
சென்னை:
தமிழக சட்டசபையில் இன்று, குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக காரசார விவாதம் நடைபெற்றது. கேரளா போல் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என திமுக உறுப்பினர் துரைமுருகன் பேசினார். பாஜகவுடன் கூட்டணியில் இருக்கும்போது ஏன் எதிர்க்கவில்லை? என அமைச்சர் உதயகுமார் கேள்வி எழுப்பினார்.
பாஜக கூட்டணியில் இருந்தபோது குடியுரிமை சட்டம் திருத்தப்படவில்லை என துரைமுருகன் பதில் அளித்தார். அப்போது குடியுரிமை சட்டத்திற்கு எதிராக எம்எல்ஏக்கள் தமிமுன் அன்சாரி, அபுபக்கர் கோஷம் எழுப்பியதால் சட்டசபையில் பரபரப்பு ஏற்பட்டது.
சிறுபான்மையினருக்கு ஆதரவாக உள்ளதாக கூறும் அதிமுக, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தது ஏன்? என மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
அதிமுகவால் ஒரு சிறுபான்மையினராவது பாதிக்கப்பட்டு உள்ளதாக சுட்டிக்காட்ட முடியுமா என அமைச்சர் உதயகுமார் கேட்டார்.
துரைமுருகன் பேசும்போது, குடியுரிமை சட்டத்தை எதிர்க்கவில்லை, திருத்தத்தையே எதிர்க்கிறோம் என கூறினார்.
அதன்பின்னர் அமைச்சர் உதயகுமார் பேசும்போது, ‘அசாமை தவிர வேறுஎந்த மாநிலத்திலும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை அமல்படுத்த வில்லை. தேசிய குடிமக்கள் பதிவேட்டை தமிழகத்தில் அமல்படுத்த நினைத்தால் முதல் குரலாக அதிமுக எதிர்க்கும்’ என்றார்.