செய்திகள்
குடியுரிமை திருத்த சட்ட விவகாரம்- தமிழக சட்டசபையில் இருந்து திமுக வெளிநடப்பு
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றாததால் தமிழக சட்டசபையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
சென்னை:
தமிழக சட்டசபையில் இன்று திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசும்போது, குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக ஒரு கோரிக்கையை எழுப்பினார்.
‘மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம் ஒருமைப்பாட்டிற்கு உகந்தது அல்ல. இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றக்கோரி கடிதம் கொடுத்துள்ளேன். இதனை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.’ என்றார்.
இதற்கு பதிலளித்து பேசிய சபாநாயகர் தனபால், ‘குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றக்கோரி நீங்கள் கொடுத்த மனு ஆய்வில் உள்ளது. அதை எடுத்துக்கொள்ளும்படி என்னை யாரும் வற்புறுத்த முடியாது. தீர்மானம் தொடர்பாக ஆராய்ந்து உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும்’ என்றார்.
சபாநாயகரின் பதிலில் திருப்தி ஏற்படாததால், திமுக உறுப்பினர்கள் அனைவரும் மு.க.ஸ்டாலின் தலைமையில் வெளிநடப்பு செய்தனர். அவர்களைத் தொடர்ந்து காங்கிரஸ் எம்எல்ஏக்களும் வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின், இன்னும் ஓரிரு தினங்களே சட்டசபை கூட்டம் நடைபெற உள்ளதால், குடியுரிமை சட்டத்திற்கு எதிரான தீர்மானம் தொடர்பாக சபாநாயகர் முடிவு எடுப்பதாக தெரியவில்லை என்று குற்றம்சாட்டினார்.