செய்திகள்
ஜே.என்.யூ. மாணவர்கள் மீது தாக்குதல்- சீமான் கண்டனம்
ஜே.என்.யூ. மாணவர்கள் மீதான தாக்குதல் ஒட்டுமொத்த நாட்டுக்கே ஏற்பட்ட பெரும் தலைக்குனிவாகும் என சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை:
ஜே.என்.யூ. மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள ட்விட்டரில் கூறியிருப்பதாவது:-
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சபர்மதி விடுதிக்குள் ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்த முகமூடி அணிந்த சமூக விரோதிகள், மாணவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமாகத் தாக்குதல் தொடுத்திருப்பது வன்மையானக் கண்டனத்திற்குரியது. இது ஒட்டுமொத்த நாட்டுக்கே ஏற்பட்ட பெரும் தலைகுனிவாகும்.
விடுதி கட்டண உயர்வு தொடங்கி குடியுரிமைச்சட்டத்திருத்தம் வரை அநீதிக்கெதிராகக் களத்தில் சமரசமற்று நிற்கும் மாணவப்பிள்ளைகளுக்கு ஆளும் வர்க்கத்தால் நேரடியாக விடப்பட்டிருக்கிற கொலைமிரட்டல், அச்சுறுத்தல்.
தாக்குதலில் ஈடுபட்டக் கொடுங்கோலர்களை உடனடியாகக் கடுஞ்சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த ட்விட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளது.