செய்திகள்
விபத்து

திருச்சி அருகே விபத்து- புத்தாண்டு கொண்டாட சென்ற 2 வாலிபர்கள் பலி

Published On 2020-01-01 10:58 GMT   |   Update On 2020-01-01 10:58 GMT
திருச்சி அருகே மோட்டார்சைக்கிள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் புத்தாண்டு கொண்டாட சென்ற 2 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருச்சி:

திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை அருகே உள்ள காவல்காரன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாக்கியராஜ் மகன் நவீன்குமார் (வயது 19), தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் மகன் ரத்தினசாமி (19). பர்னிச்சர் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

நண்பர்களான நவீன் குமாரும், ரத்தினசாமியும் புத்தாண்டு கொண்டாடுவதற்காக நேற்று இரவு 11 மணியளவில் ஒரு மோட்டார் சைக்கிளில் வீட்டில் இருந்து வெளியே புறப்பட்டனர். பின்னர் பெட்டவாய்த்தலை வள்ளுவர் நகர் பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் தங்களின் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் நிரப்பி விட்டு அங்கிருந்து புறப்பட்டனர்.

பெட்ரோல் பங்க்கில் இருந்து சற்று தொலைவில் திருச்சி-கரூர் மெயின் ரோட்டில் சென்றபோது அந்த வழியாக வந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியது. இதில் ரத்தினசாமியும், நவீன் குமாரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர்.

ரத்தினசாமி தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உயிருக்கு போராடிய நவீன்குமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே நவீன்குமாரும் பரிதாபமாக இறந்தார். புத்தாண்டு கொண்டாட புறப்பட்ட இளைஞர்கள் விபத்தில் சிக்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

இது குறித்து பெட்டவாய்த்தலை போலீஸ் இன்ஸ்பெக்டர் பன்னீர் செல்வம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News