செய்திகள்
கோப்பு படம்

பூதப்பாண்டி அருகே காதலியின் உறவினரை குத்திக் கொன்ற வாலிபர்

Published On 2020-01-01 10:20 GMT   |   Update On 2020-01-01 10:20 GMT
பூதப்பாண்டி அருகே காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் காதலியின் உறவினரை வாலிபர் குத்திக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாகர்கோவில்:

குமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே உள்ள இறச்சகுளம் அம்பலத்துருத்தி பகுதியைச் சேர்ந்தவர் தேவானந்த் (வயது 21). இவர் தெரிசனங் கோப்பைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணை காதலித்து வந்தார்.

இவர்களது காதலுக்கு இளம்பெண்ணின் பெற்றோரும், உறவினர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இருந்தாலும் தேவானந்த், இளம்பெண்ணை அடிக்கடி சந்தித்து பேசினார்.

கடந்த மாதம் 25-ந் தேதி கிறிஸ்துமஸ் தினத்தன்று தேவானந்த், தனது காதலியை பார்ப்பதற்காக தெரிசனங்கோப்புக்கு சென்றார். அப்போது காதலியின் உறவினர்களான அருள்தாஸ் (40), ஆனந்த் (42) ஆகியோர் அவரை பார்த்து கண்டித்தனர். ஆத்திரத்தில் தேவானந்த்தை அவர்கள் தாக்கவும் செய்தனர். இதில் தேவானந்த்துக்கும், அருள்தாஸ், ஆனந்த்துக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது.

ஆனந்த்தின் மனைவி வீடு அம்பலத்துருத்தியில் உள்ளது. நேற்று இரவு ஆனந்தும், அருள்தாசும் அங்கு சென்றனர். ரோட்டில் நின்று அவர்கள் பேசிக் கொண்டிருந்தனர்.

இதையறிந்த தேவானந்த் தனது நண்பர்கள் 3 பேருடன் சென்றார். ரோட்டில் நின்று கொண்டிருந்த ஆனந்த், அருள்தாசிடம் அவர்கள் தகராறு செய்தனர். திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவர்கள் 2 பேரையும் சரமாரியாக கத்தியால் குத்தினர். இதில் ஆனந்த்தும், அருள்தாசும் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

ஆனந்த் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியிலும், அருள்தாஸ் தனியார் ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டனர். ஆனந்த் சிகிச்சை பலனின்றி இறந்தார். அருள்தாசுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து பூதப்பாண்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் தேவானந்த் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள்.

காதல் விவகாரத்தில் நடந்த கொலை சம்பவத்தால் இறச்சகுளம், தெரிசனங் கோப்பு பகுதிகளில் பதட்டம் நிலவி வருகிறது. அங்கு அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News