செய்திகள்
கொள்ளை நடந்த தவமணி வீட்டின் முன்பு பொதுமக்கள் திரண்டு இருப்பதை படத்தில் காணலாம்.

நல்லம்பள்ளி அருகே தொழில் அதிபர் வீட்டில் நகை-பணம் கொள்ளை

Published On 2019-12-30 10:11 GMT   |   Update On 2019-12-30 10:11 GMT
தருமபுரி அருகே தொழில் அதிபர் வீடு உள்பட 2 வீடுகளில் துணிகர கொள்ளை நடந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தருமபுரி:

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளியை அடுத்துள்ள சேசம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தவமணி (வயது 48). தொழில் அதிபரான இவர் சொந்தமாக ஹாலோ பிளாக் கல் தயார் செய்து விற்பனை செய்து வருகிறார்.

இந்த நிலையில் தவமணி நேற்று தனது குடும்பத்தினருடன் உறவினர் துக்க நிகழ்ச்சிக்காக சொந்த ஊரான சிவாடிக்கு சென்றார்.

இன்று காலை தவமணி வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் இருந்தது. இதை தொடர்ந்து உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு துணிகள் சிதறி கிடந்தது.

அப்போது பீரோவில் இருந்த 2 லட்சத்து 66 ஆயிரம் பணமும், 7½ பவுன் தங்க நகையும் திருட்டு போய் இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து தவமணி அதியமான் கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

அப்போது தவமணி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியே செல்வதை மர்ம நபர்கள் நோட்டமிட்டுள்ளனர். பின்னர் அவர்கள் நள்ளிரவில் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த நகை, பணத்தை கொள்ளை அடித்து சென்றது தெரிய வந்துள்ளது.

மேலும் இந்த கட்டித்தின் மேல் மாடியில் வசிக்கும் சிவலிங்கம் என்பவரின் வீட்டின் பூட்டும் உடைக்கப்பட்டிருந்தது. அந்த வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 2 லட்சம் பணத்தையும் மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றுள்ளது தெரியவந்தது.

இதையடுத்து வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை விரைவில் பிடித்து விடுவோம் என்று போலீசார் தெரிவித்தனர்.

உள்ளாட்சி தேர்தலின் போது வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை அடித்து சென்றது அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News