செய்திகள்
கைது

கோவையில் 118 கிலோ குட்கா பதுக்கி விற்பனை - கடை உரிமையாளர் கைது

Published On 2019-12-27 10:00 GMT   |   Update On 2019-12-27 10:00 GMT
கோவையில் 118 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீசார், பதுக்கி வைத்திருந்த கடை உரிமையாளர் கைது செய்தனர்.
கோவை:

தமிழகத்தில் குட்கா விற்பனைக்கு அரசு தடை விதித்துள்ளது. இருப்பினும் அவற்றை நேரடியாக விற்காமல் ரகசியமாக கடத்தி வந்து பல இடங்களில் விற்பனை செய்து வருகின்றனர்.

கோவையில் மளிகை கடை மற்றும் சிறிய கடைகளில் குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக அடிக்கடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததையொட்டி சோதனையில் ஈடுபட்டு மூட்டை மூட்டையாக குட்காவை பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடைவீதி போலீசாருக்கு வைசியாள் வீதியில் தடை செய்யப்பட்ட குட்கா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கெம்பட்டி காலனியை சேர்ந்த மகேந்திரன் என்பவர் கடையில் சோதனை செய்தனர். அப்போது அங்கு ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான 118 கிலோ குட்கா மூட்டை மூட்டையாக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவற்றை பறிமுதல் செய்து குட்காவை பதுக்கி வைத்திருந்த கடை உரிமையாளர் மகேந்திரனை கைது செய்தனர். திடீரென அந்த பகுதியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News