கழுகுமலை அருகே அக்காள் கணவரை தாக்கிய வாலிபர் கைது
கழுகுமலை:
கழுகுமலை அருகே உள்ள கரடிகுளம் சின்னகாலனியை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 42). இவர் கழுகுமலையில் சி.டி விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி முருகேஸ்வரி. மாணிக்கம் தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து முருகேஸ்வரி அதே பகுதியில் வசிக்கும் தனது தம்பி பாலசுப்பிரமணியனிடம் (31) கூறியுள்ளார்.
இது தொடர்பாக பாலசுப்பிரமணியன், மாணிக்கத்திடம் தட்டிக் கேட்டுள்ளார். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த பாலசுப்பிரமணியன் மாணிக்கத்தை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த மாணிக்கம் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் வீடு திரும்பினார்.
இது குறித்து அவர் கழுகுமலை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் வழக்குப்பதிவு செய்து பாலசுப்பிரமணியனை கைது செய்தார்.