செய்திகள்
வழக்கு

மனைவி வரதட்சணை புகார்- கோவை போலீஸ்காரர் மீது 3 பிரிவுகளில் வழக்கு

Published On 2019-12-23 07:42 GMT   |   Update On 2019-12-23 07:42 GMT
கோவையில் வரதட்சணை கேட்டு கணவர் , மாமியார் கொடுமைப்படுத்துவதாக மனைவி போலீசில் புகார் செய்தார். போலீசார் இருவர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கவுண்டம்பாளையம்:

கோவை கணுவாய் இடையர்பாளையம் வித்யா காலனியை சேர்ந்தவர் சுவேதா(வயது 20). இவர் துடியலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

திருப்பூர் மாவட்டம் மேற்கு பல்லடம் முல்லை நகரை சேர்ந்த பிரசாந்த்(28) என்பவருக்கும், எனக்கும் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடந்தது. பிரசாந்த் காமநாயக்கன்பாளையத்தில் உள்ள போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். எனது திருமணத்தின் போது எனது தந்தை வரதட்சணையாக 32 பவுன் நகையும், பிரசாந்துக்கு 7 பவுன் செயினும் கொடுத்தார்.

இந்த நிலையில் பிரசாந்த், என்னிடம் புது வீடு கட்ட வேண்டும். அதற்காக நீ உனது தந்தையிடம் இருந்து ரூ.15 லட்சம் வாங்கி வருமாறு கூறினார். ஆனால் நான் வாங்கி வர மறுப்பு தெரிவித்தேன்.

இதனால் ஆத்திரமடைந்த எனது கணவர் மற்றும் மாமியார் பத்மாவதி(55) ஆகியோர் என்னை பணம் வாங்கி வா என்று கூறி கொடுமைப்படுத்தினர். மேலும் என்னை வீட்டை விட்டு விரட்டி விட்டனர். இதையடுத்து நான் எனது தந்தை வீட்டிற்கு வந்து நடந்த சம்பவங்களை கூறினேன்.

பின்னர் எனது தந்தை, தாய் மற்றும் அண்ணன் ஆகியோர் இதுகுறித்து சமாதானம் பேசுவதற்காக எனது கணவர் வீட்டிற்கு சென்றனர். அப்போது அவர்கள் எனது தந்தை, தாய் மற்றும் அண்ணனை மிரட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து துடியலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மீனாம்பிகை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய போலீஸ்காரர் பிரசாந்த் மற்றும் அவரது தாய் பத்மாவதி ஆகியோர் மீது வரதட்சணை கொடுமை, கொலை மிரட்டல் உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
Tags:    

Similar News