செய்திகள்
கொள்ளை

வல்லத்தில் தலைமை ஆசிரியை வீட்டில் 9½ பவுன் நகை கொள்ளை

Published On 2019-12-20 09:54 GMT   |   Update On 2019-12-20 09:54 GMT
தஞ்சை அடுத்துள்ள வல்லத்தில் தலைமை ஆசிரியை வீட்டில் 9½ பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வல்லம்:

தஞ்சையை அடுத்துள்ள வல்லம் கம்பன் நகரை சேர்ந்தவர் வாசுதேவன் (வயது 64). இவர் வல்லம் அருகே உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் அலுவலராக பணியாற்றி ஓய்வுபெற்று விட்டார். இவரது மனைவி ஹேமலதா (53). இவர் வல்லம் அருகே உள்ள குருவாடிப்பட்டி அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.

இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். அவர்களுக்கு திருமணமாகி மகன் வெளிநாட்டிலும், மகள் பெங்களூருவிலும் வசித்து வருகின்றனர்.

வல்லம் கம்பன் நகரில் உள்ள வீட்டில் வாசுதேவன் அவரது மனைவி ஹேமலதா ஆகியோர் தனியாக வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று காலை ஹேமலதா உள்ளாட்சி தேர்தல் பணிக்காக சென்று விட்டார். வாசுதேவன் வீட்டை பூட்டி விட்டு தஞ்சைக்கு மருந்துகள் வாங்க சென்றார்.

பிறகு அவர் வீட்டிற்கு திரும்பி வந்த போது வீட்டின் முன்பக்க கதவில் போடப்பட்டிருந்த பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் அவர் வீட்டிற்குள் சென்று பார்த்த போது அங்கு பீரோவில் வைக்கப்பட்டிருந்த தங்க செயின், வளையல், மோதிரம் ,நெக்லஸ் உள்ளிட்ட 9½ நகைகள் திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து அவர் வல்லம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அப்பாசாமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

பள்ளி தலைமை ஆசிரியை வீட்டில் பட்டப்பகலில் நகைகள் திருடு போயிருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News