செய்திகள்
குடவாசலில் குட்டையில் மூழ்கி 1½ வயது குழந்தை பலி
திருவாரூர் மாவட்டம் குடவாசலில் குட்டையில் மூழ்கி 1½ வயது குழந்தை பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடவாசல்:
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அத்திக்கடை தெற்கு தெருவை சேர்ந்தவர் உதயக்குமார். இவரது 1½ வயது குழந்தை கிரிவாசன் சம்பவத்தன்று கிரிவாசன் தெருவில் விளையாடி கொண்டிருந்தானாம். அவரது தாய் தீபா வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார்.
அப்போது அந்த குழந்தை எதிர்பாராத விதமாக வீட்டின் பின்புறம் இருந்த குட்டைக்கு சென்றுள்ளான். அந்த குட்டையில் தண்ணீர் நிரம்பி இருந்துள்ளது. இதில் குழந்தை கிரிவாசன் தவறி விழுந்து மூழ்கி இறந்து விட்டான்.
இது தெரியாமல் தாயார் தீபா தெரு முழுவதும் குழந்தையை தேடியுள்ளார்.
பின்னர் மதியம் வீட்டின் பின்புறம் உள்ள குட்டையில் குழந்தை மிதந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் கதறி துடித்துள்ளார்.
இதுகுறித்து குடவாசல் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் உடனடியாக சென்று குழந்தையின் உடலை கைப்பற்றி திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.