செய்திகள்
மழை

20, 21-ந்தேதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம் தகவல்

Published On 2019-12-15 07:52 GMT   |   Update On 2019-12-15 07:52 GMT
20, 21-ந்தேதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை:

தமிழ்நாட்டில் பருவ மழை தீவிரம் அடைந்துள்ளதால் பரவலாக பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

இது பற்றி சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது:-

தமிழகம் மற்றும் கேரள எல்லையையொட்டி நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

சென்னை, திருச்சி, ஈரோடு, தூத்துக்குடி, தர்மபுரி, தஞ்சாவூர், கரூர், நீலகிரி, திருப்பூர், ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், திருவள்ளூர், திருநெல்வேலி, உள்ளிட்ட மாவட்டங்களில் பல இடங்களில் நேற்றிரவு மழை பெய்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இன்றும் பரவலாக மழை பெய்யும். சேலம், தர்மபுரி, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கன மழை பெய்யக் கூடும்.

சென்னையை பொறுத்த வரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

வருகிற 20, 21-ந்தேதிகளில் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உருவாகி வருகிறது. வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நகர்ந்து வருவதை பொறுத்து மழையின் அளவு அமையும்.

தென் தமிழகத்தில் அதிக மழை பெய்யுமா? அல்லது வட தமிழகம் வரை மழை இருக்குமா? என்பது 2 நாட்களில் தெரியவரும்.

கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம்:-

திருச்சி நதியார் அணை 9 செ.மீ., கொடுமுடி, திருச்செந்தூர் 6 செ.மீ., தர்மபுரி, அரூர், வல்லம் 5 செ.மீ., பஞ்சப்பட்டி, குன்னூர், அரவக்குறிச்சி, தாராபுரம் 4 செ.மீ., ராமநாதபுரம், மூலனூர், திருக்காட்டுப் பள்ளி, சாத்தூர், வேடசந்தூர், தாமரைப்பாக்கம், கரூர், திருச்சி மேலணை, காங்கேயம், சாதான்குளம், பொன்னேரி, திருக்கோவிலூர், சங்கரன்கோவில், திருவையாறு, மருங்காபுரி, கொடைக்கானல் ஆகிய இடங்களில் 3 செ.மீ., அளவுக்கு மழை பெய்துள்ளது.

சென்னையில் 74 செ.மீ. அளவுக்கு மழை பெய்ய வேண்டும். ஆனால் 60 செ.மீ. அளவுக்குத்தான் மழை கிடைத்துள்ளது.

இன்னும் 14 செ.மீ. அளவுக்கு மழை பெய்ய வேண்டும். பருவ மழை முடிய இன்னும் 15 நாட்கள்தான் உள்ளது. எனவே சென்னையில் வழக்கமான மழையை விட குறைவாகவே மழை பெய்துள்ளதால் பற்றாக்குறையாகவே அமையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News