செய்திகள்
குமரியில் சூறைக்காற்றுக்கு 2 லட்சம் வாழைகள் முறிந்து நாசம்
குமரியில் சூறைக்காற்றுக்கு 2 லட்சத்திற்கும் மேற்பட்ட வாழைகள் முறிந்து சேதமடைந்து உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
நாகர்கோவில்:
குமரி கடல் பகுதியில் உருவான வழிமண்டல சுழற்சியின் காரணமாக கடந்த ஒருவாரமாக சூறைக்காற்று வீசி வருகிறது. சூறைக்காற்றின் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. சுங்கான் கடை, வில்லுக்குறி, இறச்சகுளம், தக்கலை, பூதப்பாண்டி, ஈத்தாமொழி, குலசேகரம், கருங்கல், மார்த்தாண்டம், அருமனை, இரணியல் உள்ளிட்ட பகுதிகளிலும் சூறைக்காற்று வீசியதால் வாழை மரங்கள் முறிந்து விழுந்தது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட வாழைகள் முறிந்து சேதமடைந்து உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். சூறைக்காற்றுக்கு தென்னை மரங்களும் முறிந்து விழுந்து உள்ளது. மலையோரப்பகுதிகளில் இருந்த ரப்பர் மரங்களும் சேதமடைந்துள்ளன.
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது. இதனால் அணைகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள். 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 45 அடியாக இருந்தது. அணைக்கு 839 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 821 கனஅடி தண்ணீர் பாசனதிற்காக திறந்துவிடப்பட்டு உள்ளது.
77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 72.55 அடியை எட்டி உள்ளது. அணைக்கு 131 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக் கிறது. அணையில் இருந்து 275 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றாறு-1 அணையின் நீர்மட்டம் 16.24 அடியாகவும், சிற்றாறு-2 அணையின் நீர்மட்டம் 16.33 அடியாகவும் உள்ளது. மாம்பழத்துறையாறு அணை முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது.