செய்திகள்
மரணம்

ராஜபாளையத்தில் தண்ணீர் தொட்டிக்குள் மூழ்கி கல்லூரி மாணவி பலி

Published On 2019-12-07 10:15 GMT   |   Update On 2019-12-07 10:15 GMT
தண்ணீர் தொட்டியில் மூழ்கி கல்லூரி மாணவி பலியானார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராஜபாளையம்:

ராஜபாளையம் சின்ன சுரைக்காய்பட்டி தெருவைச் சேர்ந்தவர் வைகுந்தன், கட்டிட தொழிலாளி. இவரது மகள் முத்துமாரி (வயது 19).

இவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். தற்போது செமஸ்டர் விடுமுறை என்பதால் முத்துமாரி வீட்டில் இருந்தார்.

நேற்று வைகுந்தன் வேலைக்கு சென்றுவிட, அவரது மனைவி வெளியே சென்று விட்டார். இதனால் முத்துமாரி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

இந்த நிலையில் மாலையில் வைகுந்தன் வீடு திரும்பிய போது மகள் இல்லை. வீடு முழுவதும் தேடிப்பார்த்தும் பலன் இல்லை.

வீட்டின் வராண்டாவில் இருந்த தண்ணீர் தொட்டி மூடி கீழே கிடந்தது. உடனே அவர் தொட்டிக்குள் பார்த்தபோது முத்துமாரி மூழ்கி கிடந்தார்.

அதிர்ச்சியடைந்த வைகுந்தன் உடனே மகளை மீட்டு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் முத்துமாரி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கவுதம் விஜய் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

வீட்டை கழுவி விடுவதற்காக தண்ணீர் தொட்டியை எட்டிப்பார்த்தபோது முத்துமாரி தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி பலியாகி இருக்கலாம் என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Tags:    

Similar News