செய்திகள்
அரியலூரில் காப்பகத்தில் இருந்து சிறுவன் தப்பி ஓட்டம்
அரியலூரில் காப்பகத்தில் இருந்து தப்பி ஓடிய சிறுவனை போலீசார் தேடி வருகிறார்கள்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் லிங்கத்தடிமேடு கிராமம் பகுதியில் உள்ள தனியார் கல்வி நிறுவனம் சார்பில் காப்பகம் நடத்தப்பட்டு வருகிறது. இங்கு ஆதரவற்ற குழந்தைகள் 250-க்கும் மேற்பட்டோர் தங்கியிருந்து கல்வி பயின்று வருகின்றனர்.
சம்பவத்தன்று விழுப்புரம் ரெயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த ராமச்சந்திரன் (வயது 14) என்பவரை ரெயில்வே போலீசார் மீட்டனர். அப்போது அவர் தனது ஊர் அரிய லூர் மாவட்டம் ரெட்டிப்பாளையம் என்று கூறவே, அவரை போலீசார் அரியலூருக்கு அழைத்து வந்துள்ளனர். அங்கு வந்தபோது தனது ஊர் தஞ்சை ரெட்டிப்பாளையம் என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து போலீசார் ராமச்சந்திரனை, லிங்கத்தடிமேடு காப்பகத்தில் ஒப்படைத்து விட்டு சென்றனர். காப்பாளர் மோகன்ராஜ், ராமச்சந்திரனின் சகோதரர் ஜெயராமனை தொடர்பு கொண்டபோது, நாளை வந்து அழைத்து செல்வதாக ஜெயராமன் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 1-ந்தேதி திடீரென காப்பகத்தில் இருந்த ராமச்சந்திரன் தப்பி சென்று விட்டார். அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. பின்னர் இதுகுறித்து கயர்லாபாத் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி ராமச்சந்திரனை தேடி வருகின்றனர்.