செய்திகள்
காரிமங்கலம் வாரச்சந்தையில் வெங்காயத்தின் விலை இருமடங்கு உயர்வு
காரிமங்கலம் வாரச்சந்தையில் இன்று பெரிய மற்றும் சின்ன வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து உள்ளது. ஒரு கிலோ ரூபாய் 130 க்கு விற்கப்பட்டது.
காரிமங்கலம்:
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் வாரச்சந்தை செவ்வாய்க்கிழமை கூடுவது வழக்கம். அதன்படி, இன்று கூடியது. வெங்காயத்தின் விலை தமிழகம் முழுவதும் உயர்ந்து வந்த நிலையில் இன்றும் விலை உயரும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, பெரிய மற்றும் சின்ன வெங்காயத்தின் விலை கிடுகிடுவென விலை உயர்ந்து உள்ளது. ரூபாய் 130-ஐ எட்டி உள்ளது. விலையானது மேலும் உயர வாய்ப்பு உள்ளதாக பரபரப்பாக சந்தையில் பேசப்பட்டது.
கடந்த வாரம் 1 கிலோ வெங்காயம் 70 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. இன்று பெரிய வெங்காயம் கிலோ 110-ற்கும், சின்ன வெங்காயம் கிலோ 130-க்கும் விற்பனை செய்யப்பட்டது. கடந்த சில நாட்களாக வடமாநிலங்களில் தொடர்ந்து பருவமழை பொழிந்து வருவதால் வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளது. இதனால் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதே நிலை நீடித்தால் வரும் வாரங்களில் பெரிய வெங்காயம் மற்றும் சின்ன வெங்காயத்தின் விலை 200 ரூபாயை எட்டும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
காய்கறிகளின் விலையும் இன்று சற்று உயர்ந்துள்ளது. கேரட் கிலோ 60, பீட்ரூட் கிலோ 70, பீன்ஸ் கிலோ 40, கத்திரிகாய் கிலோ 40, பாகற்காய் கிலோ 50, வெண்டைக்காய் கிலோ 30, முட்டைகோஸ் கிலோ 40, தக்காளி 20, அவரைக்காய் 30 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
முள்ளங்கி 30, கொத்தவரங்காய் 40 என உயர்ந்துள்ளது. கடந்த வாரத்தைவிட சில காய்கறிகளின் விலை, இருமடங்கு உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.