கமுதி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 நண்பர்கள் பலி
கமுதி:
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள ராமசாமிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சன்னாசி. இவரது மகன் சத்யா (வயது 22). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த சின்ராம் மகன் ஈஸ்வரன் (21), சத்தியமூர்த்தி மகன் சோலைராஜ் (22) ஆகியோரும் நண்பர்கள்.
நேற்று மாலை சத்யா பார்த்திபனூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு ஒரே மோட்டார் சைக்கிளில் நண்பர்கள் ஈஸ்வரன், சோலைராஜை அழைத்து சென்றார்.
பின்னர் இரவு 10 மணிக்கு 3 பேரும் ஊருக்கு புறப்பட்டனர். வழிமறிச்சான் பகுதியில் வந்து கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து தாறு மாறாக ஓடியது.
அதே வேகத்தில் அங்கிருந்த பஸ் நிறுத்த நிழற் குடை சுவரில் மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது. இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.
தலையில் பலத்த காயமடைந்த ஈஸ்வரன், சோலைராஜ் ஆகியோர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சத்யாவை அந்தப்பகுதி மக்கள் மீட்டு பரமக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் அங்கு உடல் நிலை மோசமானதால் மேல் சிகிச்சைக்காக சத்யா, மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து தொடர்பாக கமுதி போலீஸ் டி.எஸ்.பி. மகேந்திரன் விசாரணை மேற்கொண்டார். அபிராமம் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் நாகநாதன் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். விபத்தில் 2 வாலிபர்கள் பலியான சம்பவம் ராமசாமிபட்டியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.