செய்திகள்
கைது

மளிகை கடையில் 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டை மாற்ற முயன்ற தொழிலாளி கைது

Published On 2019-11-26 04:56 GMT   |   Update On 2019-11-26 04:56 GMT
பல்லடம் மளிகை கடையில் 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டை மாற்ற முயன்ற தொழிலாளியை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பல்லடம்:

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ளது மகாலட்சமி நகர். இங்கு திருவாரூரை சேர்ந்த நாகேந்திரன் (வயது 63) என்பவர் வாடகை வீட்டில் தங்கி பனியன் நிறுவனத்துக்கு வேலைக்கு சென்று வருகிறார்.

நேற்று அதே பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் பொருட்களை வாங்கிய பின்னர் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை கொடுத்தார். அதனை வாங்கிய கடைக்காரருக்கு சந்தேகம் ஏற்பட்டது. ரூபாய் நோட்டு கள்ளநோட்டாக இருக்கலாம் என்று பல்லடம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து குறிப்பிட்ட 2 ஆயிரம் ரூபாய் நோட்டை வாங்கி சோதனை செய்தனர். சோதனையில் அது கள்ள ரூபாய் நோட்டு தான் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து கள்ள நோட்டு கொடுத்து பொருட்கள் வாங்கிய நாகேந்திரனை பிடித்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்.

இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் தொடர்ந்து நாகேந்திரனிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

டாலர் சிட்டியான திருப்பூர் மாவட்டத்தில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அதிக அளவில் புழக்கத்தில் உள்ளது. இதனை பயன்படுத்திய கும்பல் கள்ளநோட்டுகளை அதிக அளவு திருப்பூரில் மாற்றியிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட நாகேந்திரனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News