search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கள்ளநோட்டு பறிமுதல்"

    • வீட்டு உரிமையாளர் தங்கராஜிடம் போத்தனூர் போலீசார் விசாரணை நடத்தினர்.
    • வீட்டிற்கு எப்போது வருகிறார், போகிறார் என்பது தெரியவில்லை. அவரது நடவடிக்கையில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டதால் புகார் அளித்தேன்.

    கோவை:

    குமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் ஹரேந்திரன் என்ற எர்வின் எவின்ஸ் (வயது49). இவர் ஓமியோபதி டாக்டர் எனக் கூறி கோவை வெள்ளலூர் ராமசாமி கோனார் நகரில் உள்ள தங்கராஜ் என்பவரது வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்தார்.

    இந்த நிலையில் கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள தலையோலபறம்பு போலீசார் கொள்ளை வழக்கு தொடர்பாக எர்வினை கைது செய்து அழைத்து சென்றனர்.

    இதைத்தொடர்ந்து வீட்டின் உரிமையாளர் தங்கராஜ், கைதான எர்வின் எவின்ஸ் நடவடிக்கையில் சந்தேகம் இருப்பதாக போத்தனூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் அவரது வீட்டிற்கு சென்று சோதனை செய்தனர்.

    சோதனையின் போது வீட்டில் போலி தங்க கட்டிகள், மற்றும் ஒரு புறம் அச்சடிக்கப்பட்ட 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள், மற்றும் 3 ரப்பர் ஸ்டாம்பு, ஒரு துப்பாக்கி (ஏர்கன்) ஆகியவை இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    வீட்டு உரிமையாளர் தங்கராஜிடம் போத்தனூர் போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் கடந்த 45 நாட்களுக்கு முன்பு எர்வின் எவின்ஸ் வாடகைக்கு வந்தார். அவரிடம் உங்களது மனைவி, குழந்தைகள் எங்கே என்று கேட்டேன். அதற்கு அவர்கள் பின்னர் வருவார்கள் என்று கூறினார்.

    கடந்த 15 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்த ஒன்றரை லட்சம் ரூபாயை காணவில்லை என என்னிடம் கேட்டார். அதற்கு நான் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டியது தானே என்றேன்.

    அதற்கு அவர் வேண்டாம் என கூறிவிட்டார். மேலும் வீட்டிற்கு எப்போது வருகிறார், போகிறார் என்பது தெரியவில்லை. அவரது நடவடிக்கையில் எனக்கு சந்தேகம் ஏற்பட்டதால் புகார் அளித்தேன்.

    இவ்வாறு அவர் போலீசாரிடம் தெரிவித்தார்.

    இதனையடுத்து போத்தனூர் போலீசார் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட போலி தங்க கட்டிகள் துப்பாக்கி ஒரு பக்கம் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகள் எர்வினுக்கு எப்படி வந்தது? என விசாரித்து வருகிறார்கள். எர்வின் போலி டாக்டராக இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். எனவே கேரள போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ள அவரை காவலில் எடுத்து விசாரிக்கவும் கோவை போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    • சென்னையை சேர்ந்த ஒரு கும்பல் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட இடுக்கியை சேர்ந்த 2 பேரை பயன்படுத்தி வந்துள்ளனர்.
    • 20 கள்ளநோட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

    கூடலூர்:

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பீர்மேடு தனியார் வங்கியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 500 ரூபாய் கள்ளநோட்டு 2 வந்தது. இதைபார்த்ததும் அதிர்ச்சி அடைந்த வங்கி அதிகாரிகள் இதுகுறித்து பீர்மேடு போலீசில் தகவல் தெரிவித்தனர்.

    டி.எஸ்.பி குரியன்ஜேக்கப் தலைமையிலான போலீசார் வங்கிக்கு வந்து அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமரா காட்சிகளை வைத்து கள்ளநோட்டை மாற்றியது யார் என ஆய்வு செய்தனர். அப்போது வண்டிபெரியாறு பகுதியை சேர்ந்த சிபின்ஜேக்கப்(28) என்பவர்தான் கள்ளநோட்டுகளை மாற்றியது தெரியவந்தது.

    இதனைதொடர்ந்து போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் தனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் மூலம் கள்ளநோட்டுகள் கிடைத்ததாகவும், அதனை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் இடங்களில் புழக்கத்தில் விட்டதாகவும் தெரிவித்தார். அவரது வீட்டில் சோதனை செய்தபோது 500 ரூபாய் கள்ளநோட்டுகள் 20 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

    சென்னையை சேர்ந்த ஒரு கும்பல் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட இடுக்கியை சேர்ந்த 2 பேரை பயன்படுத்தி வந்துள்ளனர். ரூ.1 லட்சம் கொடுத்தால் ரூ.2 லட்சம் கள்ளநோட்டுகள் கொடுத்துள்ளனர். அதனை வாங்கி புழக்கத்தில் விட்டு வந்துள்ளனர். அதன்படி இடுக்கி மாவட்டத்தில் 20 கள்ளநோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளது. 20 கள்ளநோட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

    இந்த கும்பலில் தொடர்புடைய நபர்கள் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இடுக்கி மாவட்ட போலீசார் மூலம் சென்னை காவல்துறைக்கும் தகவல் தெரிவித்து கள்ளநோட்டு கும்பலை பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கி உள்ளனர்.

    • தேனி மாவட்டம் போடி அருகே உள்ள கிருஷ்ணாநகர் பகுதியில் தனியார் வங்கி செயல்பட்டு வருகிறது.
    • போலீசார் டைல்ஸ் கடை உரிமையாளர் கோகுல் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி அருகே உள்ள கிருஷ்ணாநகர் பகுதியில் தனியார் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் முன்பாக உள்ள ஏ.டி.எம். எந்திரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒருவர் 8 எண்ணிக்கையில் 500 ரூபாய் கள்ள நோட்டுகளை செலுத்தினார். இது குறித்து வங்கியின் நோடல் அலுவலர் கார்த்திக் போடி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் வங்கிக்கு செலுத்தப்பட்ட 500 ரூபாய் கள்ள நோட்டுகள் குறித்து வங்கி நிர்வாகத்தினர் கண்காணிப்பு கேமரா மூலம் ஆய்வு செய்தனர். கள்ள நோட்டுகளில் சீரியல் எண்கள் மாற்றப்பட்டுள்ளதை வைத்து வங்கி அதிகாரிகளால் அவை கள்ள நோட்டுகள் என உறுதி செய்யப்பட்டது. இந்த நோட்டுகளை செலுத்தியவர் தேவாரம் மெயின் ரோட்டில் டைல்ஸ் கடை நடத்தி வரும் கோகுல் என தெரிய வந்தது. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

    இதனையடுத்து போலீசார் டைல்ஸ் கடை உரிமையாளர் கோகுல் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் தன்னை தேடி வருவதை அறிந்ததும் கோகுல் தலைமறைவானார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கம்பத்தில் ஒரு வீட்டில் கள்ள நோட்டுகள் அச்சடித்த கும்பல் சிக்கினர். தற்போது வங்கி ஏ.டி.எம்.மில் தொழிலதிபரே 500 ரூபாய் கள்ள நோட்டுகளை செலுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • கள்ள ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் வீடியோக்களை பார்த்து கள்ள நோட்டுகளை அச்சடிக்க விரும்பினார்.
    • ரூ.2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற சிரமம் என்பதால் அதனை அச்சடிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், கே.கோட்டூரை சேர்ந்தவர் கோபால் (வயது 41) 7-ம் வகுப்பு வரை படித்துள்ளார். சில ஆண்டுகள் பெங்களூரில் உள்ள அச்சகத்தில் வேலை செய்து வந்தார்.

    தற்போது வார சந்தைகளுக்கு சென்று டீ விற்று வருகிறார். போதைக்கு அடிமையான கோபால், எளிதாக பணம் சம்பாதிப்பது எப்படி என்று யூடியூப் வீடியோக்களை பார்த்து வந்தார்.

    கள்ள ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் வீடியோக்களை பார்த்து கள்ள நோட்டுகளை அச்சடிக்க விரும்பினார்.

    பெங்களூரு சென்று கலர் பிரிண்டர், தடிமனான வெற்று பாண்ட் பேப்பர்கள், கலர்கள், பச்சை கலர் நெயில் பாலிஷ் வாங்கி வந்தார். 6 மாதங்கள் வீட்டில் ரகசியமாக ரூ.500, ரூ.200, ரூ.100 நோட்டுகளை அச்சடித்து வந்தார். ரூ.500 நோட்டுகளில் பாதுகாப்பு இழைக்கு பச்சை நிற நெயில் பாலிஷ் பூசினார்.

    அச்சடிக்கப்பட்ட இந்த நோட்டுகளை வாரச்சந்தையில் புழக்கத்தில் விட்டு வந்தார். கோபால் வழக்கமாக வார சந்தைகளில் டீ விற்பதால் அவர் கொடுத்த ரூபாய் நோட்டுகள் மீது கடைக்காரர்களுக்கு எந்த சந்தேகமும் வரவில்லை.

    இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட கோபால் வீட்டில் அச்சடிக்கப்பட்ட கள்ள ரூபாய் நோட்டுகளை சந்தைகளில் புழக்கத்தில் விடுவதை தொடர்ந்தார்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு, ஊரில் உள்ள காய்கறி கடையில் ரூ.500 கொடுத்து ரூ.50 மதிப்புள்ள காய்கறிகளை வாங்கினார்.

    கோபால் கொடுத்த 500 ரூபாய் நோட்டின் மீது கடைக்காரருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இது குறித்து பலமனேர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கோபால் கொடுத்த 500 ரூபாய் நோட்டை வாங்கி பார்த்தார். அது போலி ரூபாய் நோட்டு என தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கோபாலை கைது செய்து, அவரது வீட்டில் இருந்து ரூ.8,200 மதிப்புள்ள கள்ள ரூபாய் நோட்டுகள், பிரிண்டர் மற்றும் வெற்று வெள்ளை காகிதங்களை பறிமுதல் செய்தனர்.

    கோபால் கடந்த 6 மாதங்களாக எவ்வளவு கள்ள நோட்டுகளை அச்சடித்தார் எவ்வளவு கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்டு உள்ளார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ரூ.2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற சிரமம் என்பதால் அதனை அச்சடிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

    கோவையில் ரூ.60 லட்சம் கள்ளநோட்டுகள் அச்சடித்த கும்பலில் ஒருவரான கிதர் முகமதுவிடம் போலீசார் நடத்திய விசாரணையில், வியாபாரிகள் போல நடித்து கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டதாக தெரிவித்துள்ளார். #FakeCurrency
    கோவை:

    கோவையில் பிடிபட்ட கள்ளநோட்டு கும்பலின் பின்னணி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் சாய்பாபா காலனியை சேர்ந்த ஆனந்த் (வயது 31), வடவள்ளியை சேர்ந்த கிதர் முகமது(68) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    கும்பல் தலைவனான காரமடையை சேர்ந்த சுந்தர் (38) எர்ணாகுளத்தில் தலைமறைவாக இருக்கிறார். அவரை கைது செய்ய தனிப்படை போலீசார் கேரளாவில் முகாமிட்டுள்ளனர்.

    இக்கும்பல் கடந்த 2 மாதங்களில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகளை அச்சடித்து 4 மாநிலங்களில் புழக்கத்தில் விட்டுள்ளனர். மாவோயிஸ்டுகள் மற்றும் தீவிரவாத அமைப்புகளை சேர்ந்தவர்களுக்கு கள்ளநோட்டுகளை அச்சடித்து கொடுத்ததாக தகவல் வெளியாகியது.

    இதைத்தொடர்ந்து கிதர் முகமதுவிடம் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார், கியூ பிரிவு போலீசாரும் விசாரணை நடத்தினர். கோவை-கேரள எல்லையை ஒட்டிய மலை கிராமங்களில் சுந்தர், கிதர் முகமது ஆகியோர் அதிக நாட்கள் இருந்துள்ளனர். எனவே அங்கு ரூ.2 ஆயிரம் நோட்டுகளை புழக்கத்தில் விட்டார்களா? என விசாரணை நடத்தப்பட்டது.

    இந்த கும்பல் வியாபாரிகள் போல நடித்து கள்ள நோட்டுகளை மோட்டார் சைக்கிள்களில் எளிதாக கடத்தி சென்று புழக்கத்தில் விட்டுள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சூலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு கும்பல் கள்ள நோட்டுகளை கொடுத்து ஆடுகளை வாங்கிச் சென்ற சம்பவம் அடிக்கடி நடந்தது. இச்சம்பவத்தில் இவர்களுக்கு தொடர்பு உள்ளதா? என தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


    கோவையில் அச்சடிக்கப்பட்ட கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட ஏஜெண்டுகள் யார்-யார்? என்பது குறித்து கிதர் முகமதுவிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் கிடைத்த தகவல்களை வைத்து ஒரு பட்டியல் தயாரித்து விசாரணை நடத்தப்பட்டது.

    இவர்கள் போலீசில் பிடிபட்ட தகவலறிந்து ஏஜெண்டுகள் செல்போனை ‘சுவிட்ச்-ஆப்’ செய்து விட்டு தலைமறைவாகி விட்டனர். அவர்கள் கடைசியாக யார்- யாரிடம் பேசினார்கள்? என பட்டியல் சேகரித்து விசாரணை நடந்து வருகிறது.

    மத்திய அரசு கடந்த 1½ வருடங்களுக்கு முன்பு பழைய 1000, 500 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்தது. அதன்பிறகு இந்த கும்பல் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை ஜெராக்ஸ் அடித்து புழக்கத்தில் விட்டுள்ளனர். இதற்காக சுந்தர் குஜராத்தில் இருந்து நவீன வெள்ளை காகிதங்களை வரவழைத்து கள்ளநோட்டுகளை அச்சடித்துள்ளனர்.

    சுந்தர் மீது கோவை போத்தனூர், சரவணம்பட்டி, வெரைட்டிஹால் போலீஸ் நிலையங்கள், சி.பி.சி.ஐ.டி. பிரிவு மட்டுமல்லாது கேரளாவிலும் பல்வேறு வழக்குகள் உள்ளது. இவருக்கு பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொடுக்கும் கும்பல் மற்றும் ஹவாலா கும்பலுடன் தொடர்பு உள்ளது.

    கோவை பீளமேட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து ரூ.60 லட்சம் மதிப்புள்ள பழைய 1000 ரூபாய் நோட்டு கண்டுகளை நேற்று போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் நாமக்கல்லை சேர்ந்த தஸ்தா கீர்(40) என்பவர் தலைமையில் காரில் வந்த 6 பேர் கும்பல் இந்த நோட்டுகளை மாற்றுவதற்காக கொண்டு வந்தது தெரியவந்தது.

    பழைய ரூபாய் நோட்டுகளை தற்போது எங்குமே மாற்ற முடியாது என்ற நிலையிலும் அவர்கள் எதற்காக கொண்டு வந்தார்கள்? என்பது பல்வேறு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. பழைய ரூபாய் நோட்டுகளை கொடுத்து கள்ள நோட்டுகளை வாங்கிச் செல்வதற்காக வந்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

    கடந்த 4 நாட்களுக்கு முன்பு சாய் பாபா காலனியில் கள்ள நோட்டு கும்பல் பிடிபட்டது தெரியாமல் இந்த கும்பல் பழைய நோட்டுகளை கொண்டு வந்திருக்கலாம் எனவும், கோவை வந்த பிறகு தகவல் கிடைக்கவே அவர்கள் தப்பிச்சென்றிருக்கலாம் என்றும் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #FakeCurrency
    ×