search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fake currency note"

    தேனி அருகே கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
    தேனி:

    தேனியை அடுத்த ஆண்டிப்பட்டி அருகே உள்ள கதிர்நரசிங்கபுரம் கால்நடை மருத்துவமனை அருகே சந்தேகத்துக்கு இடமான முறையில் கையில் பையுடன் நின்ற 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவை கள்ள ரூபாய் நோட்டுகள் என்பது தெரியவந்தது.

    விசாரணையில் அவர்கள், அதே பகுதியை சேர்ர்ந்த குமரேசன் (வயது 38), பழனிகுமார் (21), வசந்தகுமார் (30) பால்ராஜ் (36) என்பதும், கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்றதும் தெரியவந்தது.

    4 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.1 லட்சத்து 44 ஆயிரம் மதிப்புள்ள கள்ள ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    போலீசார் விசாரணையில், கைது செய்யப்பட்ட குமரேசன், திருப்பூரில் பனியன் கம்பெனி நடத்தி வருகிறார். இவருக்கு, கோவையை சேர்ந்த சுந்தரம் (38) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நண்பர்கள் ஆகினர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவையில் ரூ.2 லட்சம் மதிப்பிலான கள்ள ரூபாய் நோட்டுகளுடன் சுந்தரத்தை போலீசார் கைது செய்தனர்.

    முன்னதாக 2 லட்சம் கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விடுவதற்காக குமரேசனிடம், சுந்தரம் கொடுத்துள்ளார். குமரேசன் இந்த கள்ள நோட்டுகளை எப்படி மாற்றுவது என்பது குறித்து ஊருக்கு வந்து தனது நண்பர்களான வசந்தகுமார், பழனிகுமார், பால்ராஜ் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தியுள்ளார்.

    அதன்படி முதற்கட்டமாக அவர், நண்பர்கள் 3 பேரிமும் தலா ரூ.20 ஆயிரம் கொடுத்து கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்டுள்ளார். மீதமுள்ள பணத்தை மாற்றுவது குறித்து பேசிக்கொண்டிருந்தபோதுதான் போலீசாரிடம் மாட்டிக்கொண்டனர்.

    அவர்கள் யார், யாரிடம் பணத்தை புழக்கத்தில் விட்டனர்? இவர்களுக்கும், சர்வதேச கள்ள ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடும் கும்பலுக்கும் தொடர்பு உள்ளதா? என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். 
    கேரளாவில் லட்சக்கணக்கில் கள்ளநோட்டு அச்சடித்ததாக மலையாள டி.வி. நடிகை சூர்யா உள்பட கைதானவர்களிடம் தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணை தொடங்கியுள்ளனர்.
    திருவனந்தபுரம்:

    கேரளா மாநிலம் இடுக்கியில் உள்ள சொகுசு பங்களாவில் கள்ள நோட்டுகள் அச்சடிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் அதிரடி சோதனை நடத்தி அந்த வீட்டில் கள்ள நோட்டு அச்சிட்டதாக மலையாள டி.வி. நடிகை சூர்யா, அவரது தாயார் ரமாதேவி, தங்கை சுருதி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் இந்த கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டதாக லியோ, ரவீந்திரன், கிருஷ்ணகுமார், வினு, சன்னி ஆகியோரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

    இவர்களிடம் நடத்திய விசாரணையில் பாலக்காட்டை சேர்ந்த பிஜூ என்ற போலி சாமியாரின் தொடர்பு நடிகை சூர்யாவுக்கு கிடைத்து உள்ளது. அவர் மூலமே கள்ள நோட்டு கும்பல் அவருக்கு அறிமுகமாகி உள்ளது. அவர்கள் உதவியுடன் தனது வீட்டில் நடிகை சூர்யா கள்ள நோட்டுகளை அச்சடித்து உள்ளார்.

    தற்போது கைது செய்யப்பட்ட அனைவரும் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய போலி சாமியார் பிஜூ மற்றும் கள்ள நோட்டு கும்பலின் பின்னணியில் உள்ளவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    இதற்கிடையில் இந்த கள்ள நோட்டு வழக்கில் தேசிய புலனாய்வு அமைப்பு (ஐ.என்.ஏ.) விசாரணையை தொடங்கி உள்ளது. இந்த அமைப்பின் அதிகாரிகள் கேரளா வந்தனர். அவர்கள் இடுக்கி மாவட்டம் கட்டப்பனை பகுதியில் தங்கள் விசாரணையை தொடங்கினார்கள். நடிகை அச்சடித்த கள்ள நோட்டுகள் தமிழகம் உள்பட வெளிமாநிலங்களிலும் புழக்கத்தில் விட்டதாக கூறப்படுகிறது. அதுபற்றியும் அவர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேலும் சூர்யா நடிகை என்பதால் அவர் கள்ள நோட்டுகளை சினிமா துறையிலும் புழக்கத்தில் விட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளதால் அதுபற்றியும் விசாரணை நடந்து வருகிறது.
    கேரளாவில் கள்ளநோட்டு வழக்கில் கைதான டி.வி. நடிகைக்கு போலி சாமியாருடன் தொடர்பு உள்ளது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடும் கும்பல் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக போலீசாருக்கு பல்வேறு புகார்கள் சென்றன.

    இதைதொடர்ந்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது இடுக்கி பகுதியில் கள்ள நோட்டுகளுடன் வந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கேரள டி.வி. நடிகை சூர்யாவிடம் இருந்து அந்த கள்ள நோட்டுகளை வாங்கியதாக தெரிவித்தனர்.

    இதைதொடர்ந்து கொல்லத்தில் உள்ள நடிகை சூர்யாவின் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு கள்ள நோட்டுகள் அச்சடிக்கப்படுவது கண்டு பிடிக்கப்பட்டது. நடிகை சூர்யா, அவரது தாய் ரமாதேவி, சகோதரி சுருதி ஆகியோரை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    கள்ள நோட்டு அச்சடிப்பு கும்பலின் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என்பது பற்றியும் அவர்களுக்கு உதவியவர்கள் பற்றியும் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் நடிகை சூர்யாவுக்கு போலி சாமியார் ஒருவருடன் தொடர்பு இருக்கும் திடுக்கிடும் தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    கைதான வினு, சன்னி

    அந்த சாமியார் மூலமே சூர்யாவுக்கு கள்ள நோட்டு கும்பலுடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. அதன் பிறகே அவர் தனது வீட்டில் கள்ள நோட்டுகளை அச்சடித்து புழகத்தில் விட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. அந்த சாமியார் பற்றியும் போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் கள்ள நோட்டு அச்சடிக்க கம்ப்யூட்டர், பிரிண்டர் உள்பட நவீன கருவிகளை நடிகைக்கு வினியோகம் செய்ததாக கஞ்சியூர் பகுதியை சேர்ந்த வினு (வயது 48), சன்னி (42) ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து கள்ள நோட்டு கும்பலின் பின்னணியில் உள்ளவர்கள் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    கைதான முக்கிய குற்றவாளி கொடுத்த தகவலின்பேரில் கிணத்துக்கடவில் பதுக்கி வைத்திருந்த 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    கோவை:

    கோவை வேலாண்டிபாளையம் மருதகோனார் வீதியில் உள்ள ஒரு கடையில் தனி அறை அமைத்து 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளை அச்சடித்த அதே பகுதியை சேர்ந்த ஆனந்த் (வயது 31), வடவள்ளி மகாலட்சுமி நகரை சேர்ந்த கிதர்முகமது (62) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அந்த அறையில் இருந்து ரூ.1 கோடியே 18 லட்சம் கள்ள நோட்டுகள் மற்றும் அதை அச்சடிக்க பயன்படுத்திய எந்திரங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான காரமடையை சேர்ந்த சுந்தர் (38) என்பவர் கோவை கோர்ட்டில் சரண் அடைந்தார். இதையடுத்து போலீசார் ஆனந்த், கிதர்முகமது, சுந்தர் ஆகியோரை காவலில் எடுத்து விசாரணை செய்தனர்.

    இதில் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த உதய்பிரகாஷ் (34), விஜயகுமார் (35) ஆகியோர்தான் கள்ள நோட்டுகளை அச்சடிக்கும் எந்திரங்களை வாங்கி கொடுத்ததாக தெரி வித்தனர். இதையடுத்து தனிப்படை போலீசார் திருப்பூர் சென்று உதய்பிரகாஷ், விஜயகுமார் ஆகியோரை கைது செய்து கோவை அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

    மேலும் சுந்தரிடம் போலீசார் தனியாக விசாரணை செய்தபோது, கிணத்துக்கடவில் உள்ள தனது நண்பரின் வீட்டில் கள்ள நோட்டுகளை அச்சடிக்க காகிதங்கள் மற்றும் கள்ள நோட்டுகளை பதுக்கி வைத்து இருப்பதாக தெரிவித்தார். உடனே போலீசார் கிணத்துக்கடவு சென்று, அந்த வீட்டில் சோதனை செய்தனர். அப்போது அங்கு கட்டுக்கட்டாக கள்ள நோட்டுகளை அச்சடிக்கும் வெள்ளை காகிதங்கள் இருந்தன. அத்துடன் 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் 5 இருந்தன.

    உடனே தனிப்படை போலீசார் அந்த 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் மற்றும் கள்ள நோட்டுகளை அச்சடிக்க வைத்திருந்த வெள்ளை காகிதங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து கோவை கொண்டு வந்தனர். கிணத்துக்கடவை சேர்ந்த சுந்தரின் நண்பர் வீட்டில் யாரும் இல்லை. எனவே அவருக்கு இந்த வழக்கில் தொடர்பு உள்ளதா? தற்போது அவர் எங்கு உள்ளார்? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறும்போது, ‘சுந்தர், ஆனந்த், கிதர்முகமது ஆகியோர் கால்நடைகள் சந்தைக்கு சென்றுதான் கள்ள நோட்டுகளை வினியோகம் செய்து உள்ளனர். எனவே அவர்களிடம் இருந்து கள்ள நோட்டுகளை பெற்றவர்கள் தாராளமாக போலீசில் புகார் செய்யலாம். அவர்களின் பெயர் ரகசியமாக வைக்கப்படும்’ என்றனர். 
    ×