search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "two thousand"

    பெயர் சொல்லாமல் நன்கொடையாளர்கள் கட்சிகளுக்கு வழங்குகிற நன்கொடை வரம்பை ரூ.2 ஆயிரம் என நிர்ணயிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் தேர்தல் கமிஷன் வலியுறுத்தி உள்ளது. #DonationLimit #ElectionCommission #CentralGovernment
    புதுடெல்லி:

    அரசியல் கட்சிகளுக்கு தனி நபர்கள், நிறுவனங்கள் நன்கொடை வழங்குவது உண்டு. பல அரசியல் கட்சிகளுக்கு இந்த நன்கொடைதான் தேர்தல் நிதியாக பயன்படுகிறது.

    நமது நாட்டில் அரசியல் கட்சிகளுக்கு தனிப்பட்ட நபர்களும், நிறுவனங்களும் தங்கள் பெயரைக் கூறாமல் நன்கொடை வழங்குவதும் உண்டு.



    இப்படி பெயர் கூறாமல் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை தரக்கூடாது என அரசியல் சட்டம் கூறவில்லை. பிற சட்டங்களும்கூட இத்தகைய நன்கொடையை தடை செய்யவில்லை.

    இருப்பினும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு ‘29-சி’ ஒரு கடிவாளம் போட்டுள்ளது. அதன்படி, ரூ.20 ஆயிரத்துக்கு அதிகமாக இத்தகைய நன்கொடையை பெறுகிறபோது கட்சிகளின் பொருளாளர் இது குறித்து ஒவ்வொரு நிதி ஆண்டிலும் அறிக்கை அளிக்க வேண்டும்.

    இந்த நிலையில், மத்திய அரசுக்கு தேர்தல் கமிஷன் கடந்த ஆண்டு ஒரு கடிதம் எழுதியது. அதில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு ‘29-சி’யில் திருத்தம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியது.

    மேலும் அதில், அரசியல் கட்சிகளுக்கு ரொக்கமாக அளிக்கிற நன்கொடைக்கு ரூ.2 ஆயிரம் என்ற உச்ச வரம்பை நிர்ணயிக்க வேண்டும்; பெயர் கூறாமல் வழங்குகிற நன்கொடைக்கும் ரூ.2 ஆயிரம் என்ற அளவில் உச்ச வரம்பு நிர்ணயிக்க வேண்டும் என்று கூறி இருந்தது.

    இதில் அரசியல் கட்சிகளுக்கு ரொக்கமாக அளிக்கிற நன்கொடைக்கு ரூ.2 ஆயிரம் என்ற உச்ச வரம்பை நிர்ணயிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டது. அதை நிதி சட்டத்திலும் சேர்த்து விட்டது.

    ஆனால் பெயர் கூறாமல் வழங்குகிற நன்கொடைக்கும் ரூ.2 ஆயிரம் என்ற அளவில் உச்ச வரம்பு நிர்ணயிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படாமல் இன்னும் நிலுவையில்தான் உள்ளது.

    இதை சுட்டிக்காட்டியும், பெயர் கூறாமல் வருகிற நன்கொடைக்கு ரூ.2 ஆயிரம் என உச்சவரம்பினை நிர்ணயிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், மத்திய அரசின் சட்ட அமைச்சகத்துக்கு தேர்தல் கமிஷன் மீண்டும் ஒரு கடிதம் எழுதி உள்ளது.  #DonationLimit #ElectionCommission #CentralGovernment 
    ரெயில் நிலையங்களில் ‘செல்பி’ எடுப்பவர்களிடம் ரூ.2 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படும் என்றும் மீண்டும் தவறு செய்தால் 6 மாதம் ஜெயில் தண்டனை என்றும் ரெயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. #RailwayStation #Selfie #Fine
    சென்னை:

    இளைஞர்களிடம் செல்போன் மூலம் ‘செல்பி’ எடுக்கும் மோகம் அதிகரித்தப்படி உள்ளது.

    ‘செல்பி’ எடுத்து அவற்றை உடனுக்குடன் மற்றவர்களுக்கு பகிர்ந்து கொள்பவர்கள், ஓடும் ரெயிலிலும் வாசலில் நின்று பயணம் செய்து கொண்டே செல்பி எடுக்க தவறுவதில்லை.

    சில பயணிகள் ரெயில் நிலையங்களில் தூரத்தில் ரெயில் வரும் போது, அந்த காட்சியை பின்னணியாகக் கொண்டு செல்பி எடுக்கிறார்கள். இத்தகைய செல்பி மோகத்தால் ரெயில்களிலும், ரெயில் நிலையங்களிலும் அடிக்கடி விபத்து நடக்கிறது.

    இந்த செல்பி விபத்துகளை தடுக்க தென்னக ரெயில்வே சில திட்டங்களை அமல்படுத்தியது. அதற்கு பலன் கிடைக்காததால், ஓடும் ரெயில்களிலும், ரெயில் நிலையங்களிலும் செல்பி எடுப்பவர்களுக்கு அபராதம் விதிக்கும் திட்டத்தை தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.

    ரெயில் பெட்டிகளின் வாசல்களிலும், ரெயில் என்ஜின் முன்பும் நின்று செல்பி எடுப்பவர்களுக்கு ரூ.2 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டது. சேலம் டிவிசனில் இந்த அபராத திட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரெயில்வே ஸ்டேசன் மாஸ்டர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

    அதில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் செல்பி எடுக்கும் பயணிகளுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. சமீப காலமாக இளைஞர்கள் மட்டுமின்றி பெண்கள் மற்றும் வயதானவர்களும் கூட செல்பி மோகத்தில் சிக்கியுள்ளனர்.

    ரெயில் பயண நினைவுகளை படமாக்க சிலர் செல்பி எடுப்பதை வழக்கத்தில் வைத்துள்ளனர். முதலில் பயணிகளை எச்சரிக்கை செய்யவும், பிறகு அபராதம் விதிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ஒரே பயணி மீண்டும், மீண்டும் செல்பி எடுத்து பிடிபட்டால் அவருக்கு அபராதத்துடன் 6 மாதம் சிறை தண்டனை வாங்கிக் கொடுக்கவும் அந்த சுற்றறிக் கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த சுற்றறிக் கையைத் தொடர்ந்து நேற்று முதல் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கும் திட்டம் அமலுக்கு வந்தது.

    முதல் நாள் என்பதால் நேற்று செல்பி எடுத்த பயணிகள் எச்சரித்து விடுக்கப்பட்டனர். இன்று முதல் அபராதம் விதிக்கப்படுகிறது.#RailwayStation #Selfie #Fine
    ரெயில் நிலையங்களில் ‘செல்பி’ எடுப்பவர்களிடம் ரூ.2 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படும் என்று ரெயில்வே வாரியம் அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை இன்று முதல் அமலுக்கு வருகிறது. #RailwayStation #Selfie #Fine
    மதுரை:

    நவீன தொழில்நுட்ப வளர்ச்சியில் ‘செல்பி’ கலாசாரம் வேகமாக பரவி வருகிறது. இதனை ஒரு விதமான மனநோய் என டாக்டர்கள் கூறுகின்றனர். இந்த மனநோய் ரெயில் பயணிகளையும் விட்டுவைக்கவில்லை.

    தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியில் கேமராக்கள், வீடியோ கேமராக்களுக்கு பதிலாக செல்போன்கள் மூலம் இத்தகைய காட்சிகளை படமாக்கி மலரும் நினைவுகளாக்க முயலுகின்றனர். ஆனால் சிலர் பாலங்களில் ரெயில் செல்லும் போதும், ரெயில் பெட்டியின் படிக்கட்டில் நின்றவாறும் ‘செல்பி’ எடுக்கின்றனர்.

    இதனால், ரெயில்வேயில் அடிக்கடி உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. தண்டவாளத்தை கடக்கும்போது, ரெயிலில் அடிபட்டு இறப்பவர்களின் எண்ணிக்கையை விட தற்போது, ரெயில் வரும்போது, தண்டவாளத்தின் அருகில் இருந்து ‘செல்பி’ எடுக்கும் போது அடிபட்டு இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    இதனை தடுக்க, ரெயில் நிலையங்கள், தண்டவாள பகுதி, ரெயில் நிலைய வளாகம், பிளாட்பாரங்கள், ரெயில் படிக்கட்டுகள் ஆகியவற்றில் இருந்து ‘செல்பி’ எடுப்பவர்களுக்கு அபராதம் விதிக்க ரெயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. அதன்படி, இன்று (வெள்ளிக்கிழமை) முதல் ரெயில் நிலையங்களுக்குள் ஆபத்தான முறையில் ‘செல்பி’ எடுப்பவர்களுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட உள்ளது.

    அதேபோல, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் ரெயில் நிலைய வளாகத்தில் குப்பை தொட்டியை தவிர, பிற இடங்களில் குப்பை கொட்டும் பயணிகளிடம் இருந்து ரூ.500 அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    மதுரை கோட்டத்தில், அனைத்து ரெயில் நிலையங்களிலும் ‘செல்பி’ எடுப்பவர்கள், குப்பை கொட்டுபவர்களுக்கு உடனடியாக அந்த இடத்திலேயே அபராதம் விதிக்க பறக்கும் படை டிக்கெட் பரிசோதகர்கள் தயாராக உள்ளனர். ஆனால், இது குறித்த அறிவிப்பு பலகைகள் எதுவும் ரெயில் நிலையங்களில் வைக்கப்படவில்லை.  #RailwayStation #Selfie #Fine
    கைதான முக்கிய குற்றவாளி கொடுத்த தகவலின்பேரில் கிணத்துக்கடவில் பதுக்கி வைத்திருந்த 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    கோவை:

    கோவை வேலாண்டிபாளையம் மருதகோனார் வீதியில் உள்ள ஒரு கடையில் தனி அறை அமைத்து 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளை அச்சடித்த அதே பகுதியை சேர்ந்த ஆனந்த் (வயது 31), வடவள்ளி மகாலட்சுமி நகரை சேர்ந்த கிதர்முகமது (62) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அந்த அறையில் இருந்து ரூ.1 கோடியே 18 லட்சம் கள்ள நோட்டுகள் மற்றும் அதை அச்சடிக்க பயன்படுத்திய எந்திரங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான காரமடையை சேர்ந்த சுந்தர் (38) என்பவர் கோவை கோர்ட்டில் சரண் அடைந்தார். இதையடுத்து போலீசார் ஆனந்த், கிதர்முகமது, சுந்தர் ஆகியோரை காவலில் எடுத்து விசாரணை செய்தனர்.

    இதில் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த உதய்பிரகாஷ் (34), விஜயகுமார் (35) ஆகியோர்தான் கள்ள நோட்டுகளை அச்சடிக்கும் எந்திரங்களை வாங்கி கொடுத்ததாக தெரி வித்தனர். இதையடுத்து தனிப்படை போலீசார் திருப்பூர் சென்று உதய்பிரகாஷ், விஜயகுமார் ஆகியோரை கைது செய்து கோவை அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

    மேலும் சுந்தரிடம் போலீசார் தனியாக விசாரணை செய்தபோது, கிணத்துக்கடவில் உள்ள தனது நண்பரின் வீட்டில் கள்ள நோட்டுகளை அச்சடிக்க காகிதங்கள் மற்றும் கள்ள நோட்டுகளை பதுக்கி வைத்து இருப்பதாக தெரிவித்தார். உடனே போலீசார் கிணத்துக்கடவு சென்று, அந்த வீட்டில் சோதனை செய்தனர். அப்போது அங்கு கட்டுக்கட்டாக கள்ள நோட்டுகளை அச்சடிக்கும் வெள்ளை காகிதங்கள் இருந்தன. அத்துடன் 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் 5 இருந்தன.

    உடனே தனிப்படை போலீசார் அந்த 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகள் மற்றும் கள்ள நோட்டுகளை அச்சடிக்க வைத்திருந்த வெள்ளை காகிதங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து கோவை கொண்டு வந்தனர். கிணத்துக்கடவை சேர்ந்த சுந்தரின் நண்பர் வீட்டில் யாரும் இல்லை. எனவே அவருக்கு இந்த வழக்கில் தொடர்பு உள்ளதா? தற்போது அவர் எங்கு உள்ளார்? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறும்போது, ‘சுந்தர், ஆனந்த், கிதர்முகமது ஆகியோர் கால்நடைகள் சந்தைக்கு சென்றுதான் கள்ள நோட்டுகளை வினியோகம் செய்து உள்ளனர். எனவே அவர்களிடம் இருந்து கள்ள நோட்டுகளை பெற்றவர்கள் தாராளமாக போலீசில் புகார் செய்யலாம். அவர்களின் பெயர் ரகசியமாக வைக்கப்படும்’ என்றனர். 
    ×