செய்திகள்
குன்னம் அருகே லாரி கவிழ்ந்து டிரைவர் பலி
குன்னம் அருகே லாரி கவிழ்ந்த விபத்தில் டிரைவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
குன்னம்:
பெரம்பலூர் மாவட்டம் பொம்மனபாடியைச் சேர்ந்தவர் சாந்தகுமார். இவரது மகன் பிரபு (வயது 29), லாரி டிரைவர். இவர் பெரம்பலூர் மாவட்டம் படாலூரில் உள்ள கல் குவாரியில் ஜல்லி கற்களை லாரியில் ஏற்றிக்கொண்டு அரியலூர் மாவட்டம் மீன் சுருட்டிக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது பெரம்பலூர்-அரியலூர் சாலையில் குன்னம் அடுத்துள்ள தங்கநகரம் என்ற இடத்தில் சென்று கொண்டிருக்கும்போது திடீரென லாரி தனது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து அருகில் இருந்த ஓடையில் இறங்கியது.
இதில் பிரபு சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.