பட்டுக்கோட்டையில் சுடுகாட்டில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
பட்டுக்கோட்டை:
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை சந்தைப்பேட்டையில் சுடுகாடு உள்ளது. இங்குள்ள தூங்குமூஞ்சி மரத்தின் கிளையில் சுமார் 25 அடி உயரத்தில் வாலிபர் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்குவது இன்று காலை தெரிய வந்தது.
இதுபற்றி பொதுமக்கள் கொடுத்த தகவலின்பேரில் பட்டுக்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தூக்கில் கிடந்த வாலிபர் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தூக்கில் தொங்கிய வாலிபருக்கு சுமார் 35 வயது இருக்கும். பேண்ட்- சர்ட் அணிந்திருந்த அந்த வாலிபர் காவி வேட்டியில் தூக்கு போட்டுள்ளார்.
எனவே அவர் இந்து அமைப்பை சேர்ந்தவரா? அவர் எப்படி இறந்தார்? யாராவது அவரை கொலை செய்து தூக்கில் தொங்க விட்டார்களா? அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவரே மரத்தில் ஏறி தூக்குப்போட்டாரா? அதில் வேறு ஏதேனும் மர்மம் உள்ளதா? என மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனை முடிவில் தான் அவர் தற்கொலை செய்தாரா? கொலை செய்யப்பட்டாரா? என்ற உண்மை நிலவரம் தெரிய வரும். இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.