2-வது திருமணம் செய்த இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை- தந்தை போலீசில் புகார்
புதுச்சேரி:
புதுவை கோரிமேடு கவிக்குயில் நகர் 2-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. டெம்போ டிரைவர். இவரது முதல்மனைவி இறந்து விட்டதால் கடந்த 2017-ம் ஆண்டு கணவரை இழந்த சுமதி (29) என்ற பெண்ணை கிருஷ்ணமூர்த்தி 2-வது திருமணம் செய்தார்.
ஏற்கனவே முதல் மனைவி மூலம் கிருஷ்ணமூர்த்திக்கு ஒரு குழந்தையும், அதே போல் சுமதிக்கு முதல் கணவர் மூலம் ஒரு குழந்தையும் உள்ள நிலையில் தற்போது கிருஷ்ணமூர்த்தி மூலம் சுமதிக்கு 1½ வயதில் பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு திடீரென வீட்டில் சுமதி மின் விசிறியில் சேலையால் தூக்குபோட்டு தொங்கினார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று காலை சுமதி பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே சுமதியின் தந்தை தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், அவரை கிருஷ்ணமூர்த்தி தற்கொலைக்கு தூண்டியதாக போலீசில் புகார் செய்துள்ளார். இதுகுறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.