செய்திகள்
கைது

திருப்பூர் அருகே கணவரை கொன்று விபத்து நாடகமாடிய மனைவி கைது

Published On 2019-11-21 10:14 GMT   |   Update On 2019-11-21 10:14 GMT
திருப்பூர் அருகே கணவரை கொன்று விபத்து என்று நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருப்பூர்:

திருப்பூர் அடுத்த மங்கலம் மீனாட்சி நகர் 2-வது வீதியை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது49). இவரது மனைவி உமாதேவி (47). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். கணவன் மனைவி இருவரும் பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர்.

இந்தநிலையில் கடந்த 18-ந்தேதி வெங்கடேஷ் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து விபத்து ஏற்பட்டு இறந்துவிட்டதாக மங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பிரேத பரிசோதனை அறிக்கையில் வெங்கடேசன் தலையில் அடித்துக் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதனால் மனைவி உமா தேவி மீது சந்தேகம் அடைந்த போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தார்.

இதனால் சந்தேகமடைந்த போலீசார் மனைவி உமாதேவியிடம் தீவிரமாக விசாரணை நடத்தினர். அப்போது அவர் கணவரை கட்டையால் அடித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

எனது கணவர் மது குடிக்க அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்தார். கடந்த 18-ந் தேதி நான் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த மிக்ஸியை காணவில்லை.

இது தொடர்பாக அவரிடம் கேட்டபோது அதை விற்று மது வாங்கிக் குடித்து விட்டதாக கூறினார். இதனால் ஆத்திரத்தில் நான் அருகில் இருந்த கட்டையால் அவரை தாக்கினேன். அதில் அவர் மயங்கி விட்டார்.

விபத்து ஏற்பட்டு விட்டதாக கூறி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை சேர்த்து பின்னர் மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றோம். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.

போலீசார் விபத்து வழக்கு பதிவு செய்ததால் உடனடியாக அவரை எரித்து விட்டோம். இனிமேல் போலீஸ் பிடியில் சிக்க மாட்டோம் என்று நினைத்தேன். ஆனால் போலீசார் என்னை கைது செய்து விட்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதனையடுத்து கொலை வழக்குப்பதிவு செய்து உமாதேவியை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News