செய்திகள்
மாணவன் தீபக்

நேர்மையாக ‘லீவ் லெட்டர்’ எழுதிய மாணவனுக்கு குவியும் பாராட்டு

Published On 2019-11-21 04:40 GMT   |   Update On 2019-11-21 11:40 GMT
நேர்மையாக உண்மையைச் சொல்லி விடுப்பு எடுத்த திருவாரூர் பள்ளி மாணவனுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது.
திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் மேல ராதாநல்லூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு தீபக் என்ற மாணவர் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இவனது தந்தை விஜயராகவன் ஆட்டோ டிரைவராக பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் மாணவன் தீபக், பள்ளியில் சிறந்த மாணவனாகவும் ஆசிரியர்கள் மத்தியில் மிக நல்ல மாணவனாகவும் வலம் வருகிறார்.

தற்போது நடந்து முடிந்த காலாண்டு தேர்வில் 90 சதவீத மதிப்பெண்ணை எடுத்துள்ளார்.

மாணவன் தீபக் நேற்று முன்தினம் பள்ளிக்கு விடுப்பு எடுத்துள்ளார். இதற்காக அந்த மாணவன் தனது வகுப்பு ஆசிரியருக்கு அனுப்பியுள்ள விடுப்புக் கடிதத்தில், “தான் நேற்று ஊரில் நடந்த கபடி போட்டியை இரவு முழுவதும் கண் விழித்து பார்த்ததால் உடல் சோர்வாக உள்ளது. எனவே தனக்கு ஒரு நாள் விடுப்பு வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார். விடுப்புக்காக ஏதேதோ பொய்கள் கூறிவரும் மாணவர்கள் மத்தியில் இப்படி ஒரு நேர்மையான மாணவனா? என்று ஆசிரியருக்கு வியப்பு ஏற்பட்டது. இதையடுத்து மாணவன் தீபக்குக்கு பள்ளி வகுப்பு ஆசிரியர் மணிமாறன் விடுப்பு அளித்துள்ளார்.


இந்த நிலையில் உண்மையை கூறி தைரியமாக விடுமுறை கேட்டு கடிதம் எழுதிய மாணவன் தீபக்கை அழைத்து வகுப்பாசிரியர் மணிமாறன் பாராட்டினார். மேலும் மாணவனது படம், மற்றும் விடுமுறை கடிதத்தையும் , தனது வாட்ஸ்-அப் மற்றும் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவைப் படித்த அனைவரும் நேர்மையாக விடுப்பு கடிதம் அளித்த மாணவனுக்கும், அந்த பள்ளி ஆசிரியருக்கும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
Tags:    

Similar News