மேட்டுப்பாளையம் அருகே கிராம நிர்வாக அலுவலர் வீட்டில் 10 பவுன் நகை கொள்ளை
மேட்டுப்பாளையம்:
மேட்டுப்பாளையம் அன்னூர் ரோட்டில் உள்ள பொகளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சென்னியப்பன் (வயது70). ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர். இவரது மனைவி ராஜாமணி(45). இவர்களுக்கு மோனிஷா(25) என்ற மகளும், கதிர்வேல்(23) என்ற மகனும் உள்ளனர். மோனிஷா திருமணமாகி தனது கணவருடன் பெங்களூரில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் சென்னியப்பன் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் பெங்களூருரில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றார். பின்னர் அங்கிருந்து நேற்றுமுன் தினம் மாலையில் வீட்டிற்கு வந்தார்.
தனது வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டு கதவின் பூட்டு உடைந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டிற்குள் பீரோவில் வைத்திருந்த 10 பவுன் நகை காணாமல் போய் இருந்தது. திருடுபோன நகையின் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.
இவர் குடும்பத்துடன் ஊருக்கு சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் இரவில் வீடு புகுந்து கதவை உடைத்து நகையை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சென்னியப்பன் சிறுமுகை போலீசில் புகார் கொடுத்தார்.
போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொள்ளை போன வீட்டை பார்வையிட்டு ஏதேனும் தடயங்கள் கிடைக்குமா என சோதனையில் ஈடுபட்டனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து நகையை திருடி சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.