செய்திகள்
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 8-ம் தேதி அமெரிக்கா பயணம்
தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வரும் 8-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை அரசுமுறை பயணமாக அமெரிக்கா செல்லவுள்ளார்.
சென்னை:
தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 10 நாட்கள் அரசுமுறை பயணமாக அமெரிக்கா செல்ல உள்ளார். இதற்காக வரும் 8-ம் தேதி சென்னை விமானநிலையத்தில் இருந்து அமெரிக்கா செல்லும் துணை முதலமைச்சர் அமெரிக்காவின் சிகாகோ நகரை சென்றடைகிறார்.
சிகாகோவில் தமிழ் அமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ள சிறப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அதன்பின்னர் அங்குள்ள தமிழ் மக்களிடம் உரையாடுகிறார்.
இதைத்தொடர்ந்து வாஷிங்டன், நியூயார்க், ஹூஸ்டன் ஆகிய நகரங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் துணை முதலமைச்சர் அங்கு செயல்பாட்டில் உள்ள வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற உள்கட்டமைப்பு தொடர்பான திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்கிறார்.
மேலும், அந்நாட்டில் நடைமுறையில் உள்ள இத்தகைய திட்டங்களை தமிழகத்தில் எவ்வாறு செயல்படுத்தலாம் என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்கிறார்.
துணை முதலமைச்சருடன் நிதித்துறை செயலர் கிருஷ்ணனும் உடன் செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தனது 10 நாள் அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வரும் 17-ம் தேதி சென்னை திரும்புகிறார்.