செய்திகள்
பூண்டி ஏரி

ஏரிகளில் நீர்மட்டம் உயர்வு - சென்னை குடிநீர் சப்ளை 650 மில்லியன் லிட்டராக அதிகரிப்பு

Published On 2019-11-02 07:55 GMT   |   Update On 2019-11-02 07:55 GMT
சென்னைக்கு குடிநீர் வாரியம் குழாய் மூலம் 525 மில்லியன் லிட்டர் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது ஏரிகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் குடிநீர் சப்ளை 650 மில்லியன் லிட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னை:

சென்னை நகருக்கு பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளில் இருந்து குடிநீர் வழங்கப்படுகிறது.

கடந்த மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. சராசரியாக 22 செ.மீ. மழை பெய்து இருக்கிறது. புழல், பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரி பகுதிகளில் சராசரியாக 7 செ.மீ. மழை பெய்துள்ளது.

இந்த மழை காரணமாக சென்னை குடிநீர் ஏரிகளுக்கு ஓரளவு தண்ணீர் கிடைத்துள்ளது. பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மழை காரணமாகவும் தண்ணீர் வந்திருக்கிறது

இதனால் பூண்டி ஏரியில் 1,682 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 52 சதவீதமாகும். இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 3,231 மில்லியன் கனஅடி.

புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,300 மில்லியன் கனஅடி. தற்போது 838 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. இது 25.4 சதவீதம். சோழவரத்தில் 194 மில்லியன் கனஅடி தண்ணீர் இருக்கிறது.

இது இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 17.9 சதவீதம். செம்பரம்பாக்கத்தில் 75 மில்லியன் கனஅடி தண்ணீர் இருக்கிறது. இது மொத்த கொள்ளளவில் 2 சதவீதம் 4 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11,257 மில்லியன் கனஅடி. தற்போது இந்த ஏரிகளில் மொத்தம் 2,789 மில்லியன் கனஅடி தண்ணீர் இருக்கிறது.

பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர் தொடர்ந்து வருவதால் அங்கிருந்து புழல் ஏரிக்கு 400 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு 316 கனஅடி தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.

சென்னைக்கு குடிநீர் வாரியம் குழாய் மூலம் 525 மில்லியன் லிட்டர் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது ஏரிகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் குடிநீர் சப்ளை 650 மில்லியன் லிட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது.

சென்னை நகருக்கு மாதம் ஒன்றுக்கு 1000 மில்லியன் கனஅடி தண்ணீர் தேவைப்படுகிறது. இன்னும் சில தினங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிருஷ்ணா, வீராணம் தண்ணீர் வருகிறது. எனவே, இந்த ஆண்டு ஏரிகளில் தேவையான அளவு தண்ணீரை தேக்கி வைக்க வாய்ப்பு உள்ளது என்று குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News