செய்திகள்
கைது

திருவட்டார் அருகே திருமண வீட்டில் நகை திருடிய நண்பர் கைது

Published On 2019-11-01 09:24 GMT   |   Update On 2019-11-01 09:24 GMT
திருவட்டார் அருகே திருமண வீட்டில் நகை திருடிய நண்பரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த நகையையும் பறிமுதல் செய்தனர்.
திருவட்டார்:

திருவட்டாரை அடுத்த புளிநரங்கி பகுதியை சேர்ந்தவர் மேரி கிரிஜா (வயது 36).

மேரி கிரிஜாவின் தம்பிக்கு இன்று திருமணம் நடக்கிறது. இதற்காக நேற்று மேரி கிரிஜா வீட்டில் நிச்சயதார்த்த விழா நடந்தது.

இதில் பங்கேற்குமாறு மேரி கிரிஜா, அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள், தோழிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அழைப்பை ஏற்று பலரும் வீட்டிற்கு வந்திருந்தனர்.

மேரி கிரிஜாவின் தோழியும், தோழியின் கணவர் ராஜேந்திரன் என்பவரும் நேற்று திருமண வீட்டிற்கு வந்து விருந்து உண்டனர். அப்போது மேரி கிரிஜா அவர்கள் அருகில் நின்று புகைப்படம் எடுத்து கொண்டார்.

சிறிது நேரம் கழித்து மேரி கிரிஜா தனது கழுத்தில் கிடந்த 1½ பவுன் நகையை பார்த்த போது அதனை காணவில்லை. பதறிபோன மேரி கிரிஜா திருமண வீடு முழுவதும் தேடி பார்த்தார். எங்கு தேடியும் நகையை கண்டுபிடிக்க முடியவில்லை.

வீட்டில் நகையை தேடிக்கொண்டிருந்த போது மேரி கிரிஜாவின் தோழி கணவர் ராஜேந்திரனை காணவில்லை. இதனால் அவர் மீது திருமண வீட்டில் இருந்தவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவர்கள் இதுபற்றி திருவட்டார் போலீசில் புகார் செய்தனர். போலீசார் திருமண வீட்டிற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் அவர்கள் ராஜேந்திரனை பிடித்து விசாரித்தனர்.

இதில் அவர் நகை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் ராஜேந்திரனை கைது செய்தனர். அவரிடம் இருந்த நகையையும் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் திருமண வீட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News