செய்திகள்
குழந்தை சுஜித்தின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி
மணப்பாறை பாத்திமாபுதூர் கல்லறையில் குழந்தை சுஜித் உடலுக்கு பொதுமக்களும், உறவினர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
திருச்சி :
திருச்சி மணப்பாறை அருகே 25-ம் தேதி மாலை 5.40 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை சுஜித்தை மீட்கும் பணிகள் சுமார் 80 மணி நேரமாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில், ஆழ்துளை கிணற்றில் இரவு 10.30 மணியளவிலிருந்து குழந்தையின் உடலில் இருந்து துர்நாற்றம் வீசுவதாகவும், ஆழ்துளை கிணற்றில் சிக்கியிருந்த குழந்தை உயிரிழந்ததாக அதிகாலை 2.30 மணியளவில் வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் அறிவித்தார்.
இந்நிலையில், ஆழ்துளை கிணற்றில் விழுந்து ஐந்தாவது நாளில் 88 அடி ஆழத்தில் இருந்து குழந்தை சுஜித்தின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டு பிரேதபரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் செல்லப்பட்டது.
பிரேத பரிசோதனை முடிந்து சுஜித் உடல் மணப்பாறை அரசு மருத்துவமனையில் இருந்து கரட்டுப்பட்டி அருகே பாத்திமாபுதூர் கல்லறைத் தோட்டத்திற்கு கொண்டுவரப்பட்டு இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.
பாத்திமாபுதூர் கல்லறை தோட்டத்தில் சுஜித் உடலுக்கு திருச்சி ஆட்சியர் சிவராசு, எம்.பி.ஜோதிமண இறுதி அஞ்சலி செலுத்தினர். அதனை தொடர்நது சிறுவன் சுர்ஜித் உடலுக்கு உறவினர்களும், ஆயிரக்கணக்கான பொது மக்கள் அஞ்சலி செலுத்தினர். மெழுகுவர்த்தி ஏற்றியும், பிரார்த்தனை செய்தும் இறுதிச்சடங்குகள் நடைபெற்று வருகிறது.
பாத்திமாபுதூர் கல்லறையில் சுஜித்தின் உடலை நல்லடக்க செய்வதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. மக்கள் அஞ்சலிக்கு பின்னர் பாத்திமாபுதூர் கல்லறையில் குழந்தை சுஜித் உடல் நல்லடக்கம் செய்யப்படும்.