முதலியார்பேட்டையில் வீடு புகுந்து தாய்-மகள் மீது தாக்குதல்: வாலிபர் கைது
புதுச்சேரி:
புதுவை முதலியார்பேட்டை இந்திராநகர் தயானந்த வீதியை சேர்ந்தவர் காளிமுத்து. இவரது மனைவி அருள்தவள்ளி. இவர்களுக்கு ரம்யா(வயது19) என்ற மகள் உள்ளார். அதே பகுதியான அனிதாநகரை சேர்ந்த பாண்டுரங்கன் என்பவருடைய மகனான மணிகண்டன் (20) என்பவர் ரம்யாவை காதலிப்பதாக கூறி அவரிடம் தொந்தரவு செய்துள்ளார். இதனை ரம்யாவின் தாய் அருள்தவள்ளி கண்டித்துள்ளார்.
மேலும் சம்பவத்தன்று மணிகண்டன் ரம்யாவின் வீட்டிற்கு சென்று தகராறு செய்தார். இதையடுத்து அருள்தவள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் மணிகண்டனை அழைத்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு மணிகண்டன் மீண்டும் ரம்யாவின் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டார். அப்போது ரம்யாவை ஆபாசமான வார்த்தைகளால் பேசியும், கையாலும் தாக்கினார். இதனை தட்டிக்கேட்ட ரம்யாவின் தாய் அருள்தவள்ளியையும் மணிகண்டன் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து தப்பி ஓடிவிட்டார்.
பின்னர் இது குறித்து அருள்தவள்ளி முதலியார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்து தப்பி ஓடிய மணிகண்டனை கைது செய்தனர்.