கோவில்பட்டி சப்-கலெக்டர் அலுவலகத்தை ம.தி.மு.க.வினர் முற்றுகை
கோவில்பட்டி:
ஓடை ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி கோவில்பட்டி ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ, இளைஞர் அணி மாவட்ட செயலாளர் விநாயகா ரமேஷ் ஆலோசனையின் பேரில் கோவில்பட்டி சப்-கலெக்டர் அலுவலகத்தை ம.தி.மு.க. நகர செயலாளர் பால்ராஜ் தலைமையில் அக்கட்சியினர் முற்றுகையிட்டு கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில், ‘கோவில்பட்டியை அடுத்த இலுப்பையூரணி நெடுங்குளம் கண்மாய் முற்றிலும் தூர்ந்து விட்டது. அந்த கண்மாய்க்கு தண்ணீர் வரக்கூடிய நீர்வரத்து ஓடை மற்றும் முப்பன்பட்டியிலிருந்து நெடுங்குளம் கண்மாய்க்கு வரக்கூடிய மறுகால் ஓடை ஆகியவற்றில் ஆக்கிரமிப்புகள் பெருகிவிட்டன. இதே போன்று அனைத்து நீர்நிலைகளிலும் ஆக்கிரமிப்புகள் உள்ளன. எனவே நீர்வரத்து ஓடைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி மழைக்காலத்தில் நீர்நிலைகளுக்கு தடையின்றி தண்ணீர் வர ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும் விவசாயிகளுக்கு அனைத்து வகை உரங்களும் தட்டுப்பாடின்றி கிடைக்க வேண்டும். விவசாயிகளுக்கு வட்டி இல்லாத நகை கடன் வழங்க வேண்டும்’ என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இது குறித்து சப்-கலெக்டர் விஜயா உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
அப்போது அவருடன் ம.தி.மு.க. நகர துணை செயலாளர் நடராஜன், நகர இளைஞரணி செயலாளர் லவராஜா, மாநில தேர்தல் பணிக்குழு துணைச்செயலாளர் கேசவன் நாராயணன், மாவட்ட பொறியாளர் அணி செயலாளர் ராம்குமார், மாவட்ட விவசாய அணி துணை செயலாளர் ராமச்சந்திரன், முத்துபாண்டி, ரங்கசாமி மற்றும் பலர் உடன் இருந்தனர்.