செய்திகள்
பாலச்சந்திரன்

நீலகிரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அதீத கனமழை கிடையாது- வானிலை ஆய்வு மையம்

Published On 2019-10-22 07:26 GMT   |   Update On 2019-10-22 07:26 GMT
நீலகிரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அதீத கனமழை பெய்ய வாய்ப்பு இல்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை  தீவிரமடைந்துள்ள நிலையில், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் இன்று அதீத கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல  தலைவர் பாலச்சந்திரன் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறும். இதன் காரணமாக தமிழகத்தில் மழை நீடிக்கும். கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அதீத கனமழைக்கு வாய்ப்பு இல்லை.


சென்னையில் 2 நாட்களுக்கு கனமழை தொடரும். விழுப்புரம், கடலூர், புதுச்சேரி மற்றும் டெல்டா மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்.

சூறைக்காற்று வீசும் என்பதால் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிக்கு நாளை வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பாம்பன், மண்டபம் ஆகிய பகுதிகளில் 18 செமீ மழை பதிவாகி உள்ளது. ராமேஸ்வரம், தங்கச்சி மடம் பகுதியில் தலா 17 செமீ மழை பெய்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News