செய்திகள்
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வரைபடம்

கடலோர மாவட்டங்களில் 4 நாட்களுக்கு கனமழை- வானிலை மையம் தகவல்

Published On 2019-10-15 04:49 GMT   |   Update On 2019-10-15 04:49 GMT
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்களில் 4 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை நாளை மறுநாள் (17-ந்தேதி) தொடங்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாத்திய கூறுகள் காணப்படும் நிலையில் அதன் ஒரு பகுதியாக கடலோர தமிழகத்தின் வளி மண்டலத்தில் கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக தூத்துக்குடி, நெல்லை, திண்டுக்கல், தேனி, திருப்பூர், கோவை, நீலகிரி, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துள்ளது.

இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் மிக கனமழை பெய்துள்ளது. சென்னையில் நேற்றிரவும் மழை பெய்தது. இன்று அதிகாலையிலும் மழை பெய்துள்ளது. எழும்பூர், சென்ட்ரல், பாரிமுனை, கீழ்ப்பாக்கம், அம்பத்தூர், கோயம்பேடு, முகப்பேர், வடபழனி, கிண்டி, தி.நகர், வேளச்சேரி, அடையார், துரைப்பாக்கம், திருவொற்றியூர், வண்ணாரப்பேட்டை, மணலி, எண்ணூர், ஆவடி, திருமுல்லைவாயல், வில்லிவாக்கம் உள்பட நகரின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

இதுகுறித்து சென்னை வானிலை மைய அதிகாரி கூறுகையில், வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் வருகிற 18-ந்தேதி வரை 4 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்யும்.



குறிப்பாக நாளையும், நாளை மறுநாளும் கடலோர தமிழகம், உள் தமிழகம் பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. 18-ந்தேதி வரை மழை நீடிக்கும்.

சென்னையில் நேற்று இரவு முதல் ஆங்காங்கே மழை பெய்துள்ளது. இன்று காலையிலும் மழை பெய்தது. இன்று இரவு மழையை எதிர்பார்க்கலாம். 17-ந்தேதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் தூத்துக்குடியில் 72 மி.மீ. மழை பெய்துள்ளது. சென்னை மீனம்பாக்கத்தில் 7.8 மி.மீ., நுங்கம்பாக்கத்தில் 1.6 மி.மீ மழை பதிவாகி உள்ளது.
Tags:    

Similar News