செய்திகள்
தஞ்சையில் நகை பறித்து கொண்டு ஓடிய வாலிபர் கைது
தஞ்சையில் நகை பறித்து கொண்டு ஓடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள குலமங்கலத்தை சேர்ந்தவர் மருதராஜ் (வயது 32). சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்து தஞ்சை மருத்துவக் கல்லூரிக்கு வந்தார்.
பின்னர் மருத்துவ கல்லூரி வெளியே உள்ள பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்து கொண்டிருந்தார். அப்போது அங்கு தஞ்சை கீழவாசல் சேர்ந்த ஹரிஹரன் (20) என்பவர் குடிபோதையில் வந்தார். திடீரென அவர் மருதராஜூடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றி ஹரிஹரன் ஆத்திரமடைந்து மருதராஜ் கழுத்தில் கிடந்த 2¼ பவுன் தங்கச் செயினை பறித்துக் கொண்டு ஓடினார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மருதராஜ் அவரை விரட்டி கொண்டு ஓடினார். ஆனால் பிடிக்க முடியவில்லை.
இது குறித்து தஞ்சை மருத்துவகல்லூரி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த ஹரிஹரனை பிடித்து கைது செய்தனர்.