சீன அதிபர் வருகையால் அதிரடி சோதனை - லாட்ஜில் பதுங்கிய 2 கொலையாளிகள் கைது
சென்னை:
பிரதமர் மோடி மற்றும் சீன அதிபரின் வருகையையொட்டி, சென்னை மாநகர் முழுவதும் லாட்ஜூகளில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
சென்னையில் உள்ள போலீஸ் நிலையங்களில் வேறு வேறு காவல் நிலையங்களை சேர்ந்தவர்களும் தனித்தனியாக பிரித்து பணிக்கு அனுப்பப்பட்டுள்ளனர். ஒவ்வொரு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்களின் கீழும் 3 தனிப்படைகள் செயல்பட்டு வருகின்றன.
பெரியமேடு இன்ஸ்பெக்டர் செல்லப்பா மேற்பார்வையில் அமைந்தகரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் தலைமையிலான போலீசார் பெரியமேட்டில் லாட்ஜூகளில் சோதனை நடத்தினர். அப்போது சந்தேகத்துகிடமாக பதுங்கி இருந்த 5 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
இவர்களில் தண்டையார்பேட்டையை சேர்ந்த டேனியல், சோபன்ராஜ் ஆகியோர் கொலை வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்தது. 2 பேரிடமும் இன்ஸ்பெக்டர் செல்லப்பா விசாரணை நடத்தினார். அப்போது அவர்களிடம் 420 போதை மாத்திரைகளும் இருந்தது.
இதனை பறிமுதல் செய்தனர். வலி நிவாரணிக்கு பயன்படுத்தக்கூடிய இந்த மாத்திரைகளை மருந்துக்கடைகளில் வாங்கி கூடுதல் விலைக்கு இவர்கள் விற்பனை செய்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றார்கள். இது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.