செய்திகள்
தற்கொலை

வல்லம் அருகே கந்துவட்டி கொடுமையால் சலூன் கடைக்காரர் தற்கொலை

Published On 2019-10-05 10:26 GMT   |   Update On 2019-10-05 10:26 GMT
வல்லம் அருகே கந்துவட்டி கொடுமையால் சலூன் கடைக்காரர் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வல்லம்:

தஞ்சையை அடுத்துள்ள குருங்குளத்தை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 45). இவருடைய மனைவி நிர்மலா (40). அசோக்குமார் அய்யம்பேட்டை அருகே உள்ள மேலவழுத்தூரில் சலூன் கடை நடத்தி வந்தார். அவருக்கு கடன் பிரச்சனை இருந்து வந்ததாகவும், கந்து வட்டிக்கு கடன் கொடுத்தவர்கள் அவருக்கு நெருக்கடி கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் அசோக் குமார் தன்னுடைய சொந்த ஊரான வல்லம் அருகே குருங்குளத்திற்கு உறவினர் வீட்டுக்கு சென்று சாப்பிட்டுள்ளார். அந்த நேரத்தில் அவர் ரத்த வாந்தி எடுத்துள்ளார். அப்போது தான் அசோக்குமார் தான் எலி மருந்தை குடித்ததாக உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அசோக்குமாரை அவருடைய உறவினர்கள் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து அசோக் குமாரின் மனைவி நிர்மலா வல்லம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் வல்லம் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News