செய்திகள்
பூந்தமல்லி வாகன சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்பு சோதனை- ரூ. 65 ஆயிரம் சிக்கியது
பூந்தமல்லி வாகன சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கணக்கில் வராத ரூ. 65 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
பூந்தமல்லி:
பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டை -பெங்களூர் நெடுஞ்சாலையில் அரசு வாகன போக்குவரத்து சோதனை சாவடி உள்ளது. இதன் அருகிலேயே சோதனை சாவடி அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
தினமும் இப்பகுதி வழியாக ஆயிரக்கணக்கான உள்ளுர் மற்றும் வெளிமாநில வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சோதனை சாவடியில் கண்டெய்னர் லாரி மற்றும் லோடு வேன்களில் லஞ்சம் பெறுவதாக லஞ்ச ஒழிப்பு துறைக்கு அதிக அளவில் புகார்கள் வந்தன.
இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை 3 மணி அளவில் சென்னை மண்டல லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி பாஸ்கர் தலைமையிலான குழுவினர் வாகன சோதனை அறையில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் கணக்கில் வராத ரூ 65 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் வாகன சோதனைச்சாவடி அலுவலகத்தில் சில ஆவணங்கள் சிக்கியதாகவும் கூறப்படுகின்றது. இது தொடர்பாக பணியில் இருந்த அதிகாரிகளிடம் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணைமேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதி பரப்பரப்பாக காணப்படுகிறது.