செய்திகள்
திருட்டு

கோத்தகிரி மார்க்கெட்டில் கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருட்டு

Published On 2019-09-26 16:46 GMT   |   Update On 2019-09-26 16:46 GMT
கோத்தகிரி மார்க்கெட்டில் கடைகளின் பூட்டை உடைத்து மர்ம ஆசாமிகள் பணத்தை திருடி சென்றுள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோத்தகிரி:

கோத்தகிரி நகரின் மையப்பகுதியில் மார்க்கெட் உள்ளது. இங்கு காய்கறி, மளிகை, துணி, இறைச்சி உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகளை இரவில் பாதுகாக்கும் வகையில் காவலாளி ஒருவரை கோத்தகிரி பேரூராட்சி நிர்வாகம் பணியமர்த்தி உள்ளது. கடந்த சில நாட்களாக கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை மற்றும் இரவில் மழை பெய்து வருகிறது. இதனால் மார்க்கெட்டில் உள்ள கடைகளை முன்கூட்டியே பூட்டுவிட்டு வியாபாரிகள் தங்களது வீடுகளுக்கு திரும்பி விடுகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மார்க்கெட்டில் கனகராஜ் என்பவர் நடத்தி வரும் காய்கறி மற்றும் வெற்றிலை கடைகளின் மரக்கதவுகளை மர்ம ஆசாமிகள் உடைத்தனர். பின்னர் கடைகளுக்குள் இருந்த 10 ரூபாய், 20 ரூபாய் நோட்டுகள் மற்றும் சில்லரை நாணயங்களை திருடி சென்றனர்.

இதுகுறித்து கோத்தகிரி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோன்று கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்த உண்டியலை இரவில் மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு காம்பாய் கடை பகுதியில் மாதவன் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து திருட முயற்சி நடந்தது. கோத்தகிரி பகுதியில் திருட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர். மேலும் சந்தேகம் படும்படியாக நபர்கள் மற்றும் வடமாநில நபர்களை கண்காணித்து ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று போலீசாருக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Tags:    

Similar News