செய்திகள்
வானிலை நிலவரம்

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

Published On 2019-09-19 04:42 GMT   |   Update On 2019-09-19 04:42 GMT
சென்னை உள்ளிட்ட வட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் விடிய விடிய பலத்த மழை பெய்த நிலையில், இன்றும் 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னை:

தமிழகத்தில் வெப்பசலனம் காரணமாக பரவலாக மழை பெய்து வந்தது. இந்நிலையில், வங்க கடலில் மத்திய, மேற்கு பகுதியில் உருவாகி உள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.

அதன்படி சென்னை நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் நேற்று இரவு தொடங்கி விடிய, விடிய பலத்த மழை பெய்தது. காலையிலும் விட்டு விட்டு மழை பெய்தது. இன்றும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.  சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி சாலைகளில் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. பல இடங்களில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டு உள்ளது. வாகன போக்குவரத்தும் பாதிப்படைந்து உள்ளது.



திருவள்ளூர் மற்றும் காஞ்சீபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நள்ளிரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. திருவள்ளூரில் ஒரே நாளில் 21 செ.மீ. மழையும், பூண்டியில் 20 செமீ மழையும் பதிவாகி உள்ளது.

இதற்கிடையே, திருவள்ளூர், காஞ்சிபுரம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், சேலம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்றும் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

மேலும் வடதமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரை பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News